Friday 16 November 2018

குப்பைகள்

பாடப் புத்தகங்களை 
பைகளில் சுமந்து 
பள்ளிக்கூடம் செல்லும் 
பிஞ்சுகளின் முதுகில் 
பாரமாய் குப்பைகள்! 

விதியின் விளையாட்டில் 
வறுமையின் பிடியில் 
வாழ்க்கையைத் தொலைத்த 
வஞ்சகமில்லாப் பிஞ்சுகளுக்கு 
வாழ வழியேது? 




கண்ணுக்குத் தெரியும் 
காகிதக் குப்பைகளை 
கணப்பொழுதில் அகற்றிடலாம் 
கண்ணுக்குள் தெரியும் மனக் 
குப்பைகளை யாரறிவார்? 

குப்பைகளைப் போலவே 
கரையிலாக் கனவுகளையும் 
கள்ளமில்லா உள்ளங்கள் 
கைகளில் ஏந்திவரும் வேளை 
கைகொடுப்போம் நாமும்! 

-சிகரம் பாரதி 
09.11.2018 
மெட்ரோ நியூஸ் 
வெள்ளி வார இதழ் 
பக்கம்: B 12 

Tuesday 6 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 28 & 29.10.2018

இலங்கை அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க 19வது திருத்தத்தின் பிரகாரம் மைத்திரிக்கு தன்னை நீக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறுகிறார்.

இரண்டு கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியுள்ளதால் பிரதமர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.



ரணில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து வருகிறார். மஹிந்த தரப்பு ரணிலுக்கு காலக்கெடு விதித்துள்ளது.

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். நாடாளுமன்றின் இரண்டாம் கூட்டத் தொடர் மைத்திரிபாலவினால் விசேட வர்த்தமானி மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நவம்பர் 16ஆம் திகதியே துவங்கும்.

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் வரை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பேரம் பேசல்கள் இடம்பெறும். சிறுபான்மைக் கட்சிகளின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும்.

16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது மைத்திரிபால சிறிசேன தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மஹிந்த பிரதமர் பதவியை இழப்பதுடன் வரவு செலவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்க முடியாது போகும்.

இதன் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி கைகொடுக்காத பட்சத்தில் ஆட்சி கவிழ்வதுடன் பொதுத் தேர்தலை நோக்கி நோக்கி நாடு செல்லும். நாட்டில் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் நிலையற்ற அரசாங்கமும் தேர்தலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆட்சி மாற்றம் நீண்ட காலமாகவே திட்டமிடப்பட்டு வந்துள்ளது. அண்மையில் மைத்திரியும் மஹிந்தவும் இரகசியமாக சந்தித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீண்ட காலமாகவே தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற முயற்சித்துக் கொண்டிருந்தது.

புதிய ஆட்சியில் மஹிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைவாரா அல்லது பொதுஜன பெரமுண கட்சியிலேயே தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியே.

நம்மிடம் கேள்விகள் நிறைந்துள்ளன. பதில்கள் அரசாங்கத்திடமே உள்ளன. வரும் நாட்களில் இன்னும் புதிய விடயங்கள் வெளியாகும். பெரும்பான்மை யாருக்கு? தேர்தல் வருமா? காத்திருப்போம். 

(28.10.2018) 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் நாட்டை கொள்ளையிட முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மூன்று வருடங்களாக தன் மனதில் அடக்கி வைத்திருந்த ரகசியங்களை நேற்றைய தினம் அவர் வெளியிட்டிருந்தார். அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் இன்னும் பல ரகசியங்கள் இருப்பதாகவும் நேரமின்மை காரணமாக அவற்றை இப்போது கூறமுடியவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் அவ்வப்போது அந்த ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டார்.


ரணில் விக்கிரமசிங்கவை சிறைப்படுத்தக் கூடிய காரணிகளும் காணப்படுகின்றன. இப்போதைக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும் புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருட ஆட்சி எஞ்சியுள்ளது. மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும்.

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையாகவும் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விதமாக அரசியலமைப்பில் மேற்கொண்ட திருத்தத்தை மைத்திரிபால சிறிசேன இரத்துச் செய்திருந்தார். மீண்டும் அந்த திருத்தம் அமுல்படுத்தப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா?

அல்லது நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் பதவிக்கு வழங்கி மஹிந்த அடுத்த ஆட்சியிலும் பிரதமராகவே தொடர்வாரா? அல்லது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொள்ளப்படுமா?

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யார் யாருக்கு துரோகம் செய்தார்களோ இல்லையோ நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது என்பதை உண்மை. அந்த துரோகத்திற்கான பரிகாரம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவது மட்டுமே! 

(29.10.2018) 

புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த. மக்கள் ஆணையைப் பெற்று பிரதமர் ஆசனத்தில் மட்டுமல்ல எந்த ஆசனத்திலும் அமரலாம். அதுவே ஜனநாயக நடைமுறையும் கூட. எங்கள் வாக்குகளுக்கு ஐந்து வருட கால செல்லுபடியாகும் தன்மை இருக்கிறது.

ஆனால் யாருக்கு எந்த கட்சிக்கு வாக்கை வழங்கினோமோ அந்த அடிப்படையில் மட்டுமே செல்லுபடியாகும். கட்சி மாற்றம் ஆட்சி மாற்றம் என்பதற்கெல்லாம் நாம் வாக்களிக்கவில்லை.

ஏதோ டொலரின் பெறுமதியை 125/-க்கு மட்டுப்படுத்தினால் சரி 

(29.10.2018) 

Monday 5 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 26 & 27.10.2018

இலங்கை அரசியலில் புதிய திருப்பம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாக தான் அதிகாரத்தைக் கைப்பற்ற காரணமான ஐக்கிய தேசிய கட்சியையே தூக்கி எறிந்து நாட்டின் ஊழல்வாதி என தானே பிரகடனப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

நாம் வாக்களித்தது ரணில் - மைத்திரி கூட்டணிக்குத் தான். மைத்திரி - மஹிந்த கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவில்லை. உண்மையில் மக்களுக்காக நீங்கள் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அல்லது மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இருந்தால் ஜனவரியில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள்.



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பின் கதவு வழியாக வந்து ஆட்சியில் அமர்ந்தது போல் பின் கதவு வழியாகவே ஆட்சி மாற்றத்தை செய்ய நினைப்பது தவறானது.

நவம்பர் 5ஆம் திகதி நாடாளுமன்றில் பலப்பரீட்சை நடாத்துவதற்குப் பதில் அன்றைய தினம் ஆட்சியை முழுமையாகவே கலைத்து விட்டு தேர்தலை அறிவியுங்கள்.

தேர்தலைச் சந்திக்க நாம் தயார். நீங்கள் தயாரா 

(26.10.2018) 


நல்லாட்சி அரசாங்கமோ எதுவும் எமக்குத் தேவையில்லை. எந்த அரசாங்கம் எமக்குத் தேவை என்பதை நாங்கள் தேர்தலில் தீர்மானித்துக் கொள்கிறோம். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். 

(26.10.2018) 

தமிழகத்தில் தாமரை மலர்கிறதோ இல்லையோ இலங்கையில் தாமரை மலர்ந்து விட்டது. ஆனால் கொல்லைப் புறத்தில் மலர்ந்திருப்பது தான் வேதனை! 

(27.10.2018) 

தொண்டமான் மஹிந்தவுக்கு ஆதரவு. திகா ரணிலுக்கு ஆதரவு. சம்பந்தன் யோசிக்கிறார்.

ஐந்தாம் திகதி கூடவிருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் 16ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை இப்போது தான் உருவாக்கப் பட்டிருக்கிறது. மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டம் இன்னும் முடியவில்லை. கூட்டு ஒப்பந்த பிரச்சினை அந்தரத்தில் தொங்குகிறது.

புதிய அரசு நாடாளுமன்ற பலப்பரீட்சைக்கு தயாராக வேண்டும். வரவு செலவுத் திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டில் பல சிக்கல்களை இந்த புதிய ஆட்சி மாற்றம் உருவாக்கியிருக்கிறது. இனியாவது குழப்பம் இல்லாத ஆட்சியை வழங்குவதாக இருந்தால் நவம்பர் / டிசம்பரில் பொதுத்தேர்தலை நடாத்தி ஜனவரியில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மார்ச்சில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும்.

நடக்குமா? 

(27.10.2018)

Friday 2 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 25.10.2018

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான வேதனமாக 1000வை வழங்கக் கோரி நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 24.10.2018 திகதியன்று 'குழு 24' எனப்படும் #Team24 இனால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

அரசியல் பேதங்கள் இன்றி ஒன்றிணைந்த நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இந்தப் போராட்டங்கள் இத்துடன் முடிந்து போகக் கூடாது. மலையக மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இப்போராட்டம் தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும்.



சமூக அக்கறையுள்ள, படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் அரசியல் மாற்றமொன்றுக்குத் தயாராக வேண்டும். காலம் காலமாக அரசியல் செய்து நம்மை ஏமாற்றிப் பிழைப்பவர்களை புறந்தள்ளி புதியவர்களை நம்மவர்களை அரசியல் அதிகாரத்தில் அமரவைக்க வேண்டும்.

2019 ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறும். இதுவரை நம்மை ஆண்ட அரசியல் வாதிகளுக்கு ஓய்வளிப்போம். புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு, படித்தவர்களுக்கு வாக்களிப்போம். நம் சமூகம் உருவாக்கும் இந்த மாற்றம் முழு உலகுக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுப் போராட்டத்தில் ஒன்றிணைந்த நாம் மலையகத்துக்கான புதிய அரசியல் மாற்றத்திலும் ஒன்றிணைய வேண்டும். இது நமது அதிகாரம். நமக்கான அதிகாரம். நம்மை நாமே ஆள்வோம், நமது அதிகாரம், நமது உரிமை!



பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளமாக ரூ 1000 கோரும் நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் அடிப்படை சம்பளமாக ரூ 600 மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளன. அனைத்துக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக ரூ 1000 இனை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. 



ஆனால் எல்லா தொழிலாளியும் அனைத்துக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக ரூ 1000 இனை பெறுவது சாத்தியம் இல்லை. ஆகவே இலங்கை அரசு இதில் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும். வருடாந்த சம்பள அதிகரிப்புடன் மாதாந்த சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும்!

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.... | வலைச்சரம்

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

என்னடா இது? ரெண்டு நாளா நம்ம சிகரம்பாரதிய காணோமேன்னு நீங்க எல்லோரும் யோசிச்சிருப்பீங்க. முதலில் இரண்டு நாட்களாக இடுகை இடாமல் இறுதி இடுகைக்கு மட்டும் வந்திருப்பதற்கு மனதார மன்னிப்பைக் கோருகிறேன். பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்த சூழ்நிலையில் என்னால் பதிவிட முடியவில்லை. சோதனைகளிடம் தோற்றுவிட்டேன். வென்றிருந்தால் வலைச்சரம் வந்திருப்பேன்.  வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....


இன்று எனக்குப் பிடித்த, நான் வாசிக்கும் வலைப்பதிவுகள் வலைச்சரத்தில் அணிவகுக்கப்போகின்றன. வாருங்கள்... ..போகலாம்....

முதலாவது - திண்டுக்கல் தனபாலன். தனது பெயரிலேயே தனது தளத்தையும் அமைத்திருக்கின்ற இவரை முதலில் அறிமுகம் செய்யக் காரணம் இவரது குணம் தான். ஆம். தனது பதிவுகள் மூலமாக மட்டுமின்றி பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரைகளை இடுவதன் மூலமும் நம் அனைவரையும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் இவரது செயலைப் போல பிற பதிவர் எவரையும் கண்டதில்லை. வலைப்பதிவுகளை அடைவதில் சிக்கலா? உடனே பின்னூட்டம் மூலம் தகவல் தருவார். வலைச்சர அறிமுகமா? தகவல் சொல்வது தனபாலன் தான். உதவி என்று சொன்னால் தன்பணி போல் செய்து முடிப்பார். வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் பல. என்னைக் கவர்ந்த இவரது பதிவுகள் சில:




அடுத்தது - இரவின் புன்னகை. வலைத்தளத்தின் மூலம் அறிமுகமாகி தொலைபேசி நட்புவரை தொடர்ந்த ஒரே வெளிநாட்டு நண்பர். என்னோடு சம வயதுகளில் இருப்பவர். மிகச்சிறந்த தேடல் உள்ளவர். இப்போது "வானவல்லி" என்னும் சரித்திர நாவலை எழுதி வருகிறார். சக பதிவர்கள் அனைவரையும் சி.வெற்றிவேல் படைக்கும் இந்நாவல் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

மூன்றாவது புலவர் சா.இராமாநுசம் ஐயா அவர்களின் புலவர் குரல். சமூக அநீதிகளை தன் கவி வரிகள் மூலம் சிறப்பாக எடுத்துரைப்பவர். குப்பையை அகற்ற வேண்டாமா , திருக்குறள்  மற்றும் ஓயாத அலை போல முயற்சி வேண்டும் போன்ற பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

********



இதுவரை எனது பதிவுகள் அனைத்தையும் படித்து ஆதரவும் ஊக்கமும் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். எனது பதிவுகளுக்கு வலைச்சரத்தில் கருத்திட்டவர்களுக்கு பதிலளிக்க நேரமில்லாது போய்விட்டது. அவர்கள் அனைவர்க்கும் பதிலளிக்கப்படும் என்பதுடன் முக்கியமான கருத்துரைகளுக்கு எனது வலைத்தளத்தில் தனிப்பதிவின் மூலம் பதிலளிக்கப்படும்.



இலங்கைப் பதிவர்களை அறிமுகப்படுத்த கடுமையான தேடலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே அதிக பதிவுகளை இட முடியாமல் போனதும் அதிக பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாது போனதும். 

வாய்ப்பளித்த "வலைச்சரம்" குழுவினருக்கு நன்றிகள். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்யக் காத்திருக்கிறேன்.

இதோ மீண்டும் எனது வலைப்பதிவுகளின் பட்டியல்.




எனது நண்பியின் வலைத்தளம் 


அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி 


அன்புடன் 

சிகரம்பாரதி.

Thursday 25 October 2018

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 04

அன்பு நண்பன் உடன்பிறவா சகோதரன் வெற்றிவேலுக்கு வணக்கங்கள் பல! 

நலம், நலமறிய ஆவல். மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மற்றுமோர் கடிதம். உன் குடும்பத்தில் எல்லோரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும். 

உன் ஊடகப் பயணம் எப்படி இருக்கிறது? பெங்களூரு வேலைக்கும் விகடனின் பணிக்குமான வித்தியாசம் பிடித்திருக்கிறதா? பெங்களூருவில் இருந்து பிரிந்திருப்பதாக நினைப்பது எது? விகடன் உனக்குப் பிடித்தமான அனுபவங்களைத் தரலாம். விரைவில் உன் அடுத்த படைப்பு விகடன் பிரசுரத்தில் வெளியாக வேண்டும். 



வாழ்க்கை விசித்திரமானது. இன்று நாம் சரியெனக் கருதி எடுக்கும் முடிவுகள் நாளை எதிர்பார்த்த விளைவுகளைத் தருவதில்லை. எங்கோ ஆரம்பித்து கடைசியில் வேறெங்கோ போய் நிற்கிறோம். ஒரு நிமிடம் நின்று நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் இத்தனை நாளாக நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்கிற கேள்வி மட்டுமே எஞ்சுகிறது. மறுபடியும் பதிலைத் தேடி ஓடுகிறோம். 

என்னைப் பொறுத்தவரை நான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது என்னுடைய வாழ்க்கை இல்லை அல்லது இது எனக்கான வாழ்க்கை இல்லை என்றே சொல்வேன். ஆனால் சமரசங்களால் ஆன வாழ்க்கையை ஒப்புக்கொண்ட பிறகு அதிலிருந்து பின்வாங்குவது உலக நியாயங்களுக்கு அப்பாற்பட்டதல்லவா? 

நமக்கென்று ஓர் இலக்கு இருக்கிறது. ஒரு இலட்சியம் இருக்கிறது. ஆனால் அதை நோக்கி ஓட முடியவில்லையே? யாரோ ஒருவருக்கு இரவு பகலாக உழைத்து அவருக்கு இலட்சங்களில் உழைத்துக் கொடுத்து நாம் சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு அதையும் அவர்கள் விற்கும் பொருளுக்கே கொடுத்துவிட்டு 'மகிழ்ச்சியாக' வாழ்வது தான் வாழ்க்கையா? 

நமக்குப் பிடித்த வேலை, நினைத்த நேரத்தில் உறக்கம், பிடித்த இடங்களுக்குப் பயணம் இதையெல்லாம் அம்பானிகள் மாத்திரம் தான் அனுபவிக்க வேண்டுமா? சாமானியர்களுக்கு அதற்கான உரிமைகள் இல்லையா? சரி, உலக வழக்கங்களை மீறுவது தண்டனைக்குரிய குற்றமல்லவா? 

எனது நீண்டகாலக் கனவு நனவாகவிருக்கிறது. உன்னைப் போலவே நானும் ஊடகத் துறையில் கால்பதிக்கப் போகிறேன். இலங்கையின் பிரபல பத்திரிகை நிறுவனமான எண்பது ஆண்டுகால வரலாறு கொண்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் நவம்பர் முதலாம் திகதி முதல் இணைந்துகொள்ளவுள்ளேன். 

நீண்டகால எதிர்பார்ப்பு ஒருவழியாகப் பூர்த்தியாகவிருக்கிறது. மகிழ்ச்சி. ஆனால் பொருளாதார ரீதியாக வரும் சவாலைச் சந்திக்க வேண்டும். குறைவான அடிப்படை சம்பளத்தில் இருந்து துவங்க வேண்டும். கொழும்பு போன்ற பெருநகரத்தில் இலட்சங்களில் உழைத்தாலே போதாது. இந்த நிலையில் ஒரு சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு காலத்தை தள்ள வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. 

உனது கன்னிப் படைப்பான 'வானவல்லி' வெற்றிக்கொடியை நாட்டிவிட்டது. 'வென்வேல் சென்னி'யும் சிறப்பு. இந்த வெற்றிகள் இன்னும் தொடர வேண்டும். சிறுகதைத் தொகுப்பொன்றையும் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். மேலும் வரலாற்று நாவல் இல்லாமல் சமூக நாவல் ஒன்றையும் நீ எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இந்தக் கடிதத்தில் இது போதும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் உனது பதிலை எதிர்பார்க்கிறேன். குரல் வழியே எவ்வளவுதான் உரையாடினாலும் எழுத்தில் உரையாடுவது தனி சுகம் தான். மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கலாம்...

இப்படிக்கு, 
அன்பு நண்பன் 
சிகரம் பாரதி 
மலையகம், இலங்கை. 

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு மீண்டும் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகம் தொடர்கிறது.

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வலைப்பதிவுகளில் எழுதிவரும் புலம்பெயர் தமிழரான கானா பிரபா "மடத்துவாசல் பிள்ளையாரடி" , "ரேடியோஸ்பதி" மற்றும் "உலாத்தல்" ஆகிய வலைத்தளங்களின் சொந்தக்காரர். "வாண்டுமாமா - எங்கள்  பால்ய காலத்துக் கதை சொல்லி" , "மனதோடு பேசிய ஸ்வர்ணலதா" மற்றும் "திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

"ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவானது ஈழத்து வலைப்பதிவர்களால் நடாத்தப்படும் ஒரு குழும வலைப்பதிவாகும். சுமார் 40 பேரளவில் இவ்வலைப்பதிவுக்கு தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர். "பெண்களும் நகைகளும்" மற்றும் "நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவை. பங்களிப்போர் பட்டியல் நீளமாக இருக்கும் அளவுக்கு படைப்புகள் வெளிவராததும் ஏனோ?



நம்முடைய கருவறைப் பயணம் எப்படி இருக்கும்? உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரியாதவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஹாரியின் "ஹாரி 2G" வலைத்தளத்தின் "எமது கருவறை படி நிலைகள்" என்ற பதிவைத்தான். மேலும் இவரது "IDEAS OF ஹாரி" தளத்தில் எழுதியுள்ள "கோச்சடையான் (2014) பொம்மை படம் பம்பர் ஹிட் ஆன கதை" ஒரு கைதேர்ந்த திரை விமர்சகனின் பதிவாக அமைந்துள்ளது.

மேலும் இலங்கை சாராத தளங்களில் வெளிவந்துள்ள ஆனால் மலையகம் மற்றும் ஈழம் சார்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடிய பதிவுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்." என்று சொல்கிறது "மனசாட்சி" தளத்தின் "மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்".

ஈழ வரலாற்றுத் தொடர் - ஈழத்தின் உருவாக்கம் தொடங்கி ராஜீவின் மரணம் வரை - "ஈழம் : முகப்புப் பக்கம்"


இன்னும் இருக்கிறது. நேரம் போதாமை காரணமாக மிகுதி அடுத்த பதிவில்...

அதுவரை ,
அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 23.10.2018

பூவெல்லாம் உன் வாசம்

******

பூவுக்கு ஏதடி வாசம் 
உன் இதழ்களில் தேன்குடிக்கும் 
வண்டுகளின் தொல்லை தாங்காமல் 
உன் வாசத்தையெல்லாம் 
நீ தானே உயில் எழுதி வைத்தாய்?

- சிகரம் பாரதி

(23.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 



என் எண்ண 
ஊஞ்சலில் ஆடுகிறேன்
உன் நினைவுகள் ஆட்டுவித்துக்
கொண்டேயிருக்கின்றன
எது வரை ஆட முடியும்
உன் நினைவுகளுக்கா பஞ்சம்
வாழ்நாள் முழுவதும் 
என்னை ஆட்டுவிக்குமே? 

(23.10.2018) 

இலங்கை: கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் அமைப்பில் 2019ஆம் ஆண்டு முதல் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே அடுத்த வருடம் முதல் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் இந்த மாற்றங்களை அவதானித்துக் கொள்ளுங்கள். மாதிரி வினாப்பத்திரங்கள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து பயிற்சி செய்யுங்கள். இந்த இணைப்பில் தமிழ் மொழி மூல வினாத்தாள்களை பெற்றுக் கொள்ளலாம். 


(23.10.2018) 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தப்பட்டது ]

03. கண்டேன் காதலை

பயணங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. சிலரின் வாழ்வில் மறக்க முடியாதவை. நம் வாழ்க்கையில் பல நூறு பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் நம்மால் மறக்கவியலாது. எனது இந்தப் பயணம் என் காதலைக் கொன்று இன்னொருத்தியை என் மனதிற்குக் காவல் வைக்கப்போகும் பயணம். என் வாழ்க்கைப் பாதையைத் திசை மாற்றப்போகும் பயணம். இந்தத் தமிழ்த் திரைப்படங்களைப் போல இந்தப் பயணத்தில் திடீர் மாற்றம் நடக்கும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்துவிடக்கூடாதா என்றே என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தேன் நான். 

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில்  ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர்.  வரவேற்பறையிலிருந்த வானொலி எங்களைக் கண்டதும் பாடத் துவங்கியது.

'சீதா கல்யாண .வைபோகமே...
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே...' 

இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரின் திருப்திக்காகவே இந்தத் திருமணம் என்பதால் எப்படியும் 'சம்மதம்' என்று சொல்லத்தானே போகிறோம்? பிறகெதற்கு இதெல்லாம் என்றது என் மனது. ஆனால் வெளிப்படையாக எதையும் நான் கூறத் தலைப்படவில்லை.



பெண்ணின் பெயர் நந்தினி. வயது 25. பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகத் தொழில் புரிகிறாள். அதிகம் பேசாத அடக்கமான பெண். இது தான் மணமகளைப் பற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சுய விபரக் கோவை.

மணப் பெண் வரவேற்பறைக்குள் வந்த அந்த நிமிடம் என் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

"திவ்யா.... நீ எப்படி இங்கே......?"- எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

"என் காதலி திவ்யா இங்கு எப்படி? அதுவும் மணப் பெண் தோழியாக? நந்தினி என்ற பெயரில் தோழிகள் யாரும் அவளுக்கு இல்லையே..........?". மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலை எங்கே போய் தேடுவேன்?

கண்ணீர் கண்களை முட்டிக் கொண்டு வர எத்தனித்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக திவ்யாவை பார்த்து, பேசி இன்றோடு இரண்டு வருடங்கள். வன வாசம் முடிந்து வந்திருக்கிறாளா? என்னால் சபையில் எதையும் வாய்விட்டு கூறவோ கேட்கவோ இயலாத தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டு தவித்தேன்.

என் மனம் இப்படிப் பலவாறான சிந்தனைகளினால் துடித்துக் கொண்டிருக்க, திவ்யா என்னைக் கண்டதும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அப்பா என் தோளைத் தொட்டு "ஜெய்.... பொண்ணப் புடிச்சிருக்காப்பா?" என்று கேட்ட போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன். திவ்யாவை மீண்டும் காணாது போயிருந்தால் நிச்சயம் சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எப்படி? செய்வதறியாத சூழ்நிலையில் ஒருவித தயக்கத்துடன் "கொஞ்சம் யோசிக்கணும்ப்பா...." என்றேன். "சரி" என்றவர் அவ்வாறே பேசி நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.

வெளியே செல்லும்போது எல்லோருக்கும் பின்தங்கி மெதுவாக நடந்தபடி திவ்யாவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தேன். உள் அறையில் இருந்து வரவேற்பறைக்குள் வரும் கதவில் சாய்ந்து நின்றபடி கலங்கிய கண்களுடன் என்னையே திவ்யா பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 22.10.2018

தனிநபர் தகவல் பாதுகாப்பு மிக முக்கியமானது. இன்றைய கணினி யுகத்தில் நம் அன்றாடத் தேவைகளுக்குக் கூட இணையத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் எல்லா இடங்களிலும் நமது எல்லாத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பேஸ்புக், கூகுள் என முன்னணி தகவல் பரிமாற்ற நிறுவனங்களிலேயே தகவல் திருட்டு இலகுவாக இடம்பெறும் போது மற்ற நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம்? நமது தகவல்களுக்கு நாமே பொறுப்பு. உணர்ந்து நடந்து கொள்வது அவசியம்.

(22.10.2018) 



ஒரு வழிப் பயணம்

*******

இருவிழி வழியே
கருவிழி கண்டேன்
மான்விழி கொண்டு 
என்விழி நோக்கி
உயிர்வழி நுழைந்து
உயிர்வலி தந்தாய்
வேல்விழியாளே
என் வலி அறியாயோ
ஒருவழிப் பயணம் காதல்
வரும்வழி தெரியும்
மீளும்வழி அறியேன்
உன்விழி ஒன்றே - என்
காதல் பயணிக்கும் வழி!

- சிகரம் பாரதி 

(22.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 

Dialog Axiata இலங்கையில் 5G சோதனையையே வெற்றிகரமாக முடித்திருக்கிறது. சில இடங்களில் 4.5G இணைப்புகளையும் வழங்கியிருக்கிறது. Hutch Sri Lanka இப்போது தான் 4G வழங்கவே ஆரம்பித்திருக்கிறது. வெளங்கிரும்!

இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? 

(22.10.2018) 

அல்ஜசீரா தொலைக்காட்சி கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா 7, இங்கிலாந்து 5, பாகிஸ்தான் 3 தடவைகள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய அணிகள் குறைந்த பட்சம் தலா ஒரு தடவை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளன. 'முனாவர் ஆவணங்கள்' என்னும் பெயரில் அல்ஜசீரா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் முக்கிய வீரர்களே ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் புதிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபை விரிவான விசாரணை நடத்தி உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். 

(22.10.2018) 

Tuesday 23 October 2018

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தப்பட்டது ]

02. குழம்பிய மனம் 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.

என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.

இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.



"ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்துவிட்டு அறையை விட்டு வெளியேற எத்தனித்த சமயம் தற்செயலாய் நிலைக்கண்ணாடி மீது என் கவனம் விழ அதில் என்னைப் பார்த்த நான் ஒரு விநாடி சிலையாய் நின்றுவிட்டேன். அந்த விநாடியில் தோன்றி மறைந்த பழைய நினைவுகள் தான் அதற்குக் காரணம். ஒருமுறை உறவினர் திருமண வைபவம் ஒன்றுக்கு நான் பட்டுவேட்டி, சட்டை சகிதம் சென்றிருக்க அங்கு திவ்யாவும் வந்திருந்தாள். 

அப்போது என்னைப் பார்த்த மாத்திரத்தில் "மாமோய்... செமயா இருக்கீங்க... ம்... ம்... கலக்குங்க... கலக்குங்க..." என்றாள். அவள் சொன்னதும் எனக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவள் வித்தியாசமாகச் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அன்று எடுத்த புகைப்படத்தை இன்று பார்த்தாலும் அவளது அந்த வசனம் பசுமையாய் என் காதுகளில் கேட்கும். 

ஆமா... இந்த 'திவ்யா' யாரு? 'திவ்யா... திவ்யா... என்...' தெரியவில்லை. 'என் காதலி' என்று சொல்வதா அல்லது 'என் முன்னாள் காதலி' என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது நிச்சயதார்த்தத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பது திவ்யாவைப் பெண் பார்க்க இல்லை என்பது மட்டுமே எனக்குத் தெரியும். 

அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் வெளியே வந்தேன். சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........

Monday 22 October 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 21.10.2018

நீண்ட காலக் கனவாக இருந்த ஊடகத்துறையில் கால்பதிக்கும் கனவு நனவாகியிருக்கிறது. ஆனால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. காரணம் ஆரம்ப சம்பளம் மிகக் குறைவு. மீண்டும் ஏழு வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்ட நிலை. தாக்குப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை கைபிடித்து அழைத்துச் செல்வதும் கைவிடுவதும் காலத்தின் கைகளில் தான் இருக்கிறது. 

(20.10.2018) 

வெளிநாட்டில் வசிக்கும் மிகப்பெரிய பணக்காரர் விஜய். தேர்தலில் வாக்களிப்பதற்காக (?) இந்தியா வருகிறார். ஆனால் தேர்தலில் அவரது வாக்கையே கள்ள வாக்கு போட்டுவிடுகிறார்கள். அவர்கள் யார் எவர் என்று கண்டுபிடித்து அழித்து தனது பண பலத்தால் மாற்று அரசை அமைப்பது தான் சர்க்கார்.

மிடில...
#sarkar #சர்க்கார் 



(20.10.2018) 

நான் தருவேன் 
*****
நான் சூடும் மணமாலை/ 
நம் உறவுகள் / 
கூடி நிற்கும் இவ்வேளை / 
குறைவில்லா வாழ்வை / 
தாயாய் தந்தையாய் நானுனக்கு / 
தருவேன் நிச்சயமாய்! 

(21.10.2018 - செந்தமிழ்ச்சாரல் பேஸ்புக் குழுவின் கவிதைப்போட்டிக்கான கவிதை) 

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைக்கு ஆதரவாக வடக்கு தமிழ் மக்களும் கொழும்பு வாழ் தமிழர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

1000 ரூபா சம்பள உயர்வு என்பது தற்காலிக தீர்வு மட்டுமே. மேலும் 1000 ரூபா சம்பள உயர்வு மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று உறுதி கூற முடியாது. குறைந்த பட்சம் 25 நாள் வேலை வழங்கப்பட வேண்டும். 15 அல்லது 20 நாள் வேலை வழங்கப்படுமானால் சம்பள உயர்வு வீண் தான்.

மலையக மக்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால் மலையக மக்களுக்கு 20,000 அடிப்படை சம்பளத்துடன் மாதாந்த சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

செய்வார்களா? 

(21.10.2018)

Tuesday 11 September 2018

கிரிக்கெட்டும் நானும்!

கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை.  

Image credits to its owner only


இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை. 

பலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு  பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது! நான் இலங்கையன்!

Monday 10 September 2018

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தப்பட்டது ]

01. நினைவுகள்

'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்... 
நல்ல நாளில்....
கண்ணன் மணித் தோளில் ....
பூமாலை நான் சூடுவேன்....
பாமாலை நான் பாடுவேன்... 
என் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை. 

இன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை. 

சுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத நட்பு. எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்திருந்தாலும் சில மணித்தியாலங்களுக்கு மேல் அவை நீடிப்பதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்றும் நான் நன்றாக வாழ்வதற்கு சுசிதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. பாடல்களுக்கு நடுவில் கைப்பேசி என்னை அழைத்தது. அப்பாதான்.



"சொல்லுங்கப்பா"

"ஜெய்... இன்னும் புறப்படலையா?"

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" 

"..................................."

"சரி விடு. நா பாத்துக்குறேன்...."

"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."

"சரி ஜெய்" 

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."

"என்ன சுசி நீயும்.....?"

"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"

"ம்....... நா எதுக்கு........"

"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."

"சரிடா."

"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...

Tuesday 4 September 2018

உலக அழிவு எப்படி இருக்கும்?

தூறல் - 04 

இப்போது உலகம் அழியுமா, இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது. உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 

Image credits to its owner only


யூகம் 01 : டினோசர் என்ற விலங்கினத்தின் அழிவுக்கு ஒரு விண்கல் காரணமாயிருந்ததைப் போன்று எதிர்காலத்தில் வரப் போகும் விண்கல்லானது ஒட்டு மொத்த மனித இனத்தின் அழிவுக்கும் காரணமாயிருக்கும்.

யூகம் 02 : வேற்றுக்கிரகவாசிகள் உலகை அழிக்க படையெடுத்து வருவார்களாம். அதாவது வேற்றுக்கிரகவாசிகள் தொழிநுட்பத்தில் நம்மைவிட கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கணிப்பிடப்படுகிறது. ஆகவே, பூமியை நோக்கி வரக்கூடிய அவர்கள் பூமியை அழித்து தமது பலத்தை நிலைநாட்ட முயற்சிக்கலாம். 

யூகம் 03 : மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனே (Robot) மனிதர்களையும் இந்த உலகத்தையும் அழிக்க முற்படலாம். ஏனெனில் இயந்திர மனிதனுக்கு சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை வழங்க தொழி நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றின் சுய சிந்தனை மனிதனை அழிக்க வேண்டும் என்று தீர்மானித்தால்? 

யூகம் 04 : அம்மை நோய், சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்று நுண்ணுயிர்க் கிருமிகளினால் பாரிய - மனிதனால் கட்டுப் படுத்த முடியாத நோயொன்று உலகம் முழுவதும் பரவுவதன் மூலம் பாரிய அழிவொன்று ஏற்படலாம். 

இந்த நான்கு காரணிகள் மட்டுமல்ல, இன்னும் பல காரணிகள் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். சில வேளை உலக அழிவுக்கு நீங்கள் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இப்போது உங்கள் மூளை என்ன யூகிக்கிறது? 'கடவுளே! உலக அழிவுக்கு முன்னாடி நான் செத்துப் போயிடணும்!?' .

பதிவின் தலைப்பு : உலக அழிவு எப்படி இருக்கும்? 

வலைப்பதிவு : தூறல்கள் 

வெளியிட்ட திகதி : 23.09.2010 

என் மடிக்கணினிக்கு அகவை ஐந்து (சிகரம் பாரதி | 03.09.2018)

2013.09.01 அன்று என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக இருந்த மடிக்கணினியைக் கொள்வனவு செய்தேன். அதுநாள் வரை எனது வலைத்தளப் பணிகள் மற்றும் இதர இணைய தேவைகளுக்கு இணைய உலாவி நிலையங்களையே (Internet Browsing Centre) நான் நாட வேண்டியிருந்தது. கையில் பணம் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும். எல்லா நேரங்களிலும் அங்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் நமது எல்லாத் தேவைகளையும் அந்த நிலையங்களால் பூர்த்தி செய்யவும் முடியாது. 

ஆகவே தான் தவணைக் கொடுப்பனவு முறையில் எனது கனவு மடிக்கணினியை கொள்வனவு செய்தேன். HP Note Book 2000 என்பது தான் என்னுடைய மடிக்கணினி. இலங்கைப் பெறுமதியில் ரூபா 85,000 மதிப்புக்கு கொள்வனவு செய்தேன். முதலில் ரூபா 25,000 உம் பின்னர் மாதாந்தம் 5,000 ரூபா வீதம் பன்னிரண்டு மாதங்களுக்கு கொடுப்பனவு செய்தேன். வட்டிப் பணம் விசேட சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்டது. Etisalat Dongle ஒன்று இலவசமாகக் கொடுத்தார்கள். 



ஐந்து வருடங்கள் எனக்காக உழைத்த என் மடிக்கணினி இப்போது ஓய்வெடுக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக திரையில் வர்ணங்கள் தெளிவாக இல்லை. குறிப்பாக சிவப்பு நிறம் ஆரஞ்சு நிறம் போலத் தோற்றமளிக்கிறது. இதனால் முக்கியப் பணிகளை மடிக்கணினியில் ஆற்ற முடியவில்லை. அடுத்து அண்மைக்காலமாக மின்கலம் செயலிழந்து காணப்படுகிறது. அதன் காரணமாக நேரடி மின் இணைப்பில் மட்டுமே மடிக்கணினியை இயக்க முடியும். மடிக்கணினி எப்போது மரணத்தைத் தழுவும் எனக் கணிக்க முடியவில்லை. 

அண்மையில் Singer DUO 2 in 1 Note Book ஐ கொள்வனவு செய்திருந்தேன். இலங்கை மதிப்பில் ரூபா 30,000 பெறுமதி. Tab ஆகவும் PC ஆகவும் இதனை உபயோகிக்க முடியும். ஆனால் கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் இதில் செய்ய முடியாது. உள்ளக நினைவகத் திறன் 32GB மட்டுமே. மடிக்கணினியின் உள்ளக நினைவகத் திறன் 500GB. மடிக்கணினியின் திரை 15.2 அங்குலம். Tab இன் திரை 10.1 அங்குலம். மடிக்கணினியில் தொடுதிரை (Touch Screen) கிடையாது. Tab இல் தொடுதிரை உண்டு. 

இரண்டிலும் தனியான இலக்க விசைகள் (Dedicated Number Keys) கிடையாது என்பது எனக்கு எப்போதுமே நெருடலான விடயமாக இருந்து வந்திருக்கிறது. மேலும் இப்போது புதிய மடிக்கணினியைக் கொள்வனவு செய்வதற்கான தேவையும் எழுந்திருக்கிறது. ஆனால் கையில் பணம் இல்லை. கடந்த மூன்று மாதமாக தொழிலும் இல்லை. இந்த மாதம் மீண்டும் புதியதொரு தொழிலில் இணைந்தாலும் 2019 ஜனவரியில் தான் எனக்கான மடிக்கணினியை வாங்க இயலும். வேறு சாத்தியமான மார்க்கம் எதுவும் இல்லை. 

தற்போதைய மடிக்கணினியின் திரையை சரிசெய்வதாக இருந்தால் ரூபா 15,000 முதல் 20,000 வரை செலவாகலாம். மின்கலத்தை மாற்றுவதாக இருந்தால் இன்னும் ஒரு 10,000 ரூபா வரை மேலதிகமாக செலவாகும். Charger இல் இதுவரை சிக்கல் எதுவும் இல்லை. அதையும் மாற்ற நேர்ந்தால் அதற்கு ஒரு 15,000 ரூபா செலவாகும். ஆகவே புதிய மடிக்கணினியை வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். 

2015 டிசம்பர் மாதம் எனது மடிக்கணினிக்கு இலங்கை ரூபா 25,000 மதிப்பில் Windows 10 Professional இயங்குதளத்தை கொள்வனவு செய்து நிறுவினேன். அதுவரை Windows 7 Professional இயங்குதளத்தின் அனுமதிப்பத்திரம் அற்ற (Unlicensed) இயங்குதளப் பதிப்பையே பயன்படுத்தி வந்தேன். நான் இப்போது புதிய மடிக்கணினி ஒன்றை வாங்குவதாக இருந்தால் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்ட மடிக்கணினி ஒன்றையே வாங்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு தடவை இயங்குதளத்திற்காக 25,000 ரூபாவைச் செலவு செய்ய நேரும். 

என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் எதையாவது செய்தாக வேண்டும். Tabஐ மட்டும் வைத்து சிகரம் இணையத்தளத்தை நடத்துவதென்பது சிரமமான காரியம். மேலும் Tab இல் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைச் செய்ய முடியவில்லை. Struck ஆகி விடுகிறது. ஆதலால் மடிக்கணினியின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாகிறது. 

எனது மடிக்கணினியை நான் முறையாகப் பராமரிக்கவில்லை என்னும் உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இரவு Chargeக்குப் போட்டால் காலையில் கூட அதனை சரி பார்க்க மறந்து விடுவதுண்டு. பல நாள் இது போல நடந்திருக்கிறது. சில நேரங்களில் எனது கோபத்தை மடிக்கணினி மீது கூட காட்டியிருக்கிறேன். ம்ம்.... கடந்து போனதைப் பற்றி இப்போது கவலைப்பட்டு என்ன பயன்? 

ஐந்து வருடங்கள் இந்த மடிக்கணினி எனக்காக உழைத்திருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் என்னுடன் இருக்குமோ அத்தனை காலமும் இதைக் கைவிடப்போவதில்லை. அதன் இறுதி மூச்சு வரையில் நானும் அதனுடனேயே இருக்க ஆசைப்படுகிறேன். இன்னும் ஒன்றல்ல, பல நூறு கணினிகளை நான் வாங்கினாலும் அதற்கெல்லாம் அச்சாரமாக இருக்கும் இந்த மடிக்கணினி எப்போதும் என்னுடனேயே இருக்கும். எனக்கு இன்னுமொரு மகளாக...

#கணினி #மடிக்கணினி #இணையம் #எண்ணங்கள் #நினைவுகள் #வலைத்தளம் #HP #HPNoteBook #LapTop #PC #Tab #Dell #Windos10 #SigaramINFO 

Monday 3 September 2018

சிகரம் பாரதி | 02.09.2018

இந்த வாழ்க்கை மிக அற்புதமானது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நொடிக்கு நொடி ஆச்சரியங்களை அள்ளி வழங்கும் அற்புதம் இந்த வாழ்க்கை. நாம் என்னதான் நா தனியா இருந்துக்கறேன் என்று சொன்னாலும் நம்மை அறியாமல் நாம் யாரையாவது சார்ந்து தான் இருக்கிறோம். இந்த உலகத்தில் தனித்து வாழ்தல் என்பது சாத்தியமேயில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்ளும் என்பது போல் தான் அறைக் கதவை கதவை அடைத்துக் கொண்டால் இந்த உலகத்தில் நாம் தனியாக இருக்கிறோம் என்பதும். 

மறுபிறப்பு இருக்கிறதா, சாத்தியமா என்னும் கேள்விகளெல்லாம் அவசியமற்றவை. ஏனெனில் அதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆகவே இருக்கும் இந்த பிறப்பில் என்ன செய்ய முடியுமோ, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது மறுஜென்மத்தின் மீது நம்பிக்கை வைப்பதைப் போன்று நிச்சயமற்றது. எனவே உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள் இன்றே, இப்போதே! 



சனிக்கிழமை 01.09.2018 அன்று என் மனைவி திலகவதிக்கு பிறந்த நாள். இருபத்தெட்டு வயதாகிறது. என்னை விட மூன்று மாதம் மூத்தவர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் கிருத்திகா செல்வி என்னும் பெண் குழந்தை. திருமணத்திற்குப் பிறகு மூன்றாவது பிறந்த தினம். அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நிறைவு செய்து விட்டோம். கையைக் கடிக்கும் பொருளாதார மந்த நிலை ஒரு காரணம். மனைவி வீட்டில் இருந்து வந்துட்டுப் போங்க என்று அழைப்பு வந்தது. இப்போது நாங்கள் எனது ஊரில் வசிப்பதாலும் ஒரு மணி நேர பயணம் தான் என்பதாலும் சென்று வந்தோம். 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வகையில் வெறியன் என்று கூட வைத்துக் கொள்ளலாம். கடந்த வருட பிக் பாஸில் ஓவியாவை மிகவும் பிடிக்கும். இந்த முறை ரித்விகா தான். பிக் பாஸ் வீட்டின் ஒலிபெருக்கியான டேனியல் இன்று வெளியேறி விட்டார். மகிழ்ச்சி. அடுத்து மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா மூவரும் வரிசையாக வெளியேற வேண்டும். மக்கள் தீர்ப்பும் பிக் பாஸின் எண்ணமும் எப்படி இருக்கிறதோ யாரறிவார்?

ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியம். பன்னிரண்டு வயதில் இருந்தே என்னை அறியாமல் இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். வெற்றியை நோக்கிய இந்தப் பயணத்தில் கற்றதும் பெற்றதும் இழந்ததும் ஏராளம். ஒருமுறை இலங்கையின் பிரபல நாளிதழான வீரகேசரிக்கு உப ஆசிரியர் (Sub Editor) பதவிக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. எனக்கு அந்தப் பதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான் என்றாலும் என் சோம்பேறித்தனத்தினால் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தேன். இப்போதும் கூட நான் அந்த வாய்ப்பைத் தவற விட்டதற்காக மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறேன். என் ஆர்வத்துக்கு மதிப்பளித்து எனக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருந்தால் இன்று என் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்திருக்கும். கடந்து போன பேரூந்துக்குக் கை காட்டுவதில் என்ன பயன்?

மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஒவ்வொன்றாக உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 'சிகரம் பாரதி' வலைத்தளம் எனது தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் தாங்கி உங்களை நாடி வரும். கல்யாண வைபோகம் மற்றும் ஞாபகங்கள் என இரு தொடர் கதைகள் சிகரம் இணையத்தளத்தின் மூலம் வெளியிடவுள்ளேன். எனது பதினைந்தாவது வயதில் எழுதிய தொடர் கதை தான் ஞாபகங்கள். கல்யாண வைபோகம் இருபத்தாறு வயதில் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர். இடைநிறுத்தப்பட்ட தொடர் மீண்டும் வரவிருக்கிறது. சந்திப்போம், சிந்திப்போம் தோழர்களே!

#சிகரம்பாரதி #எண்ணங்கள் #பகிர்வு #மனம் #வலைத்தளம் #சிகரம் 

Ads

My Blog List