Monday 11 February 2019

சிகரம் பாரதி | 11.02.2019

வணக்கம் வலைத்தள நண்பர்களே! 

புதிய ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துவிட்டது. எல்லோரும் கொண்டாடித் தீர்த்தாயிற்று. இப்போது அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லா நாட்களைப் போலவும் ஒரு நாளாக ஆங்கிலப் புத்தாண்டு தினம் நம்மைக் கடந்து சென்றுவிட்டது. 




புதிய வருடத்திலும் ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் இருக்கிறோம். இப்போது தானே வருடம் ஆரம்பித்திருக்கிறது என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். 

ஒவ்வொருவரும் இந்த வருடத்தில் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என எண்ணிக் கொள்வதுண்டு. என் மனதிலும் பல திட்டங்கள் இருக்கின்றன. 

நான் மிக விரும்பும் ஊடகத் துறையில் கால்பதித்து இந்த பெப்ரவரி மாதத்துடன் வெற்றிகரமாக மூன்று மாதங்களைக் கடந்துவிட்டேன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி குறைந்தது இரண்டு வருடமாவது இந்தத் துறையில் நிலைத்துவிட வேண்டும். அந்த இரண்டு வருடத்துக்குள் இந்த ஊடகத் துறையில் என்னென்ன கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது முதல் திட்டம். 

நான் பாவித்த மடிக் கணினியின் திரையில் நிறம் மங்கி விட்டது. அத்துடன் மின்கலமும் (Battery) பழுதடைந்து விட்டது. அவற்றை சரி செய்து மீண்டும் பழைய படி எனது மடிக் கணினியை இயங்க வைக்க வேண்டும். அல்லது புதிதாக நான் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் உள்ளடக்கிய மடிக் கணினி ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்பது அடுத்த திட்டம். 

ஊடகத் துறைக்கு அவசியமான Journalism, Adobe InDesign, Adobe Photoshop, Graphic Designing, Marketing, Printing, Supply or Delivery என எல்லாவற்றையும் கிடைக்கும் வாய்ப்பிற்கேற்ப படிப்படியாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மற்றுமோர் திட்டம். இதனை ஓரளவுக்கு செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். முறையாக கற்கை நெறிகள் எதனையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவற்றில் அவ்வப்போது எழும் சந்தேகங்களை அத்துறை சார்ந்தவர்களிடம் கேட்டறிந்து பயிற்சி செய்து கொள்கிறேன். 

தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தும் பல திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான வாய்ப்பு அமையும் போது அவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன். இது போல உங்களிடமும் பல திட்டங்கள் இருக்கலாம். அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சந்திப்போம் நண்பரகளே! 

உங்கள், 
சிகரம் பாரதி. 

Friday 16 November 2018

குப்பைகள்

பாடப் புத்தகங்களை 
பைகளில் சுமந்து 
பள்ளிக்கூடம் செல்லும் 
பிஞ்சுகளின் முதுகில் 
பாரமாய் குப்பைகள்! 

விதியின் விளையாட்டில் 
வறுமையின் பிடியில் 
வாழ்க்கையைத் தொலைத்த 
வஞ்சகமில்லாப் பிஞ்சுகளுக்கு 
வாழ வழியேது? 




கண்ணுக்குத் தெரியும் 
காகிதக் குப்பைகளை 
கணப்பொழுதில் அகற்றிடலாம் 
கண்ணுக்குள் தெரியும் மனக் 
குப்பைகளை யாரறிவார்? 

குப்பைகளைப் போலவே 
கரையிலாக் கனவுகளையும் 
கள்ளமில்லா உள்ளங்கள் 
கைகளில் ஏந்திவரும் வேளை 
கைகொடுப்போம் நாமும்! 

-சிகரம் பாரதி 
09.11.2018 
மெட்ரோ நியூஸ் 
வெள்ளி வார இதழ் 
பக்கம்: B 12 

Tuesday 6 November 2018

எனது பேஸ்புக் கிறுக்கல்கள் - 28 & 29.10.2018

இலங்கை அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க 19வது திருத்தத்தின் பிரகாரம் மைத்திரிக்கு தன்னை நீக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறுகிறார்.

இரண்டு கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியுள்ளதால் பிரதமர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.



ரணில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து வருகிறார். மஹிந்த தரப்பு ரணிலுக்கு காலக்கெடு விதித்துள்ளது.

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். நாடாளுமன்றின் இரண்டாம் கூட்டத் தொடர் மைத்திரிபாலவினால் விசேட வர்த்தமானி மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நவம்பர் 16ஆம் திகதியே துவங்கும்.

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் வரை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பேரம் பேசல்கள் இடம்பெறும். சிறுபான்மைக் கட்சிகளின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும்.

16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது மைத்திரிபால சிறிசேன தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மஹிந்த பிரதமர் பதவியை இழப்பதுடன் வரவு செலவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்க முடியாது போகும்.

இதன் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி கைகொடுக்காத பட்சத்தில் ஆட்சி கவிழ்வதுடன் பொதுத் தேர்தலை நோக்கி நோக்கி நாடு செல்லும். நாட்டில் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் நிலையற்ற அரசாங்கமும் தேர்தலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆட்சி மாற்றம் நீண்ட காலமாகவே திட்டமிடப்பட்டு வந்துள்ளது. அண்மையில் மைத்திரியும் மஹிந்தவும் இரகசியமாக சந்தித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீண்ட காலமாகவே தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற முயற்சித்துக் கொண்டிருந்தது.

புதிய ஆட்சியில் மஹிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைவாரா அல்லது பொதுஜன பெரமுண கட்சியிலேயே தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியே.

நம்மிடம் கேள்விகள் நிறைந்துள்ளன. பதில்கள் அரசாங்கத்திடமே உள்ளன. வரும் நாட்களில் இன்னும் புதிய விடயங்கள் வெளியாகும். பெரும்பான்மை யாருக்கு? தேர்தல் வருமா? காத்திருப்போம். 

(28.10.2018) 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் நாட்டை கொள்ளையிட முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மூன்று வருடங்களாக தன் மனதில் அடக்கி வைத்திருந்த ரகசியங்களை நேற்றைய தினம் அவர் வெளியிட்டிருந்தார். அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் இன்னும் பல ரகசியங்கள் இருப்பதாகவும் நேரமின்மை காரணமாக அவற்றை இப்போது கூறமுடியவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் அவ்வப்போது அந்த ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டார்.


ரணில் விக்கிரமசிங்கவை சிறைப்படுத்தக் கூடிய காரணிகளும் காணப்படுகின்றன. இப்போதைக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும் புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருட ஆட்சி எஞ்சியுள்ளது. மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும்.

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையாகவும் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விதமாக அரசியலமைப்பில் மேற்கொண்ட திருத்தத்தை மைத்திரிபால சிறிசேன இரத்துச் செய்திருந்தார். மீண்டும் அந்த திருத்தம் அமுல்படுத்தப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா?

அல்லது நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் பதவிக்கு வழங்கி மஹிந்த அடுத்த ஆட்சியிலும் பிரதமராகவே தொடர்வாரா? அல்லது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொள்ளப்படுமா?

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யார் யாருக்கு துரோகம் செய்தார்களோ இல்லையோ நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது என்பதை உண்மை. அந்த துரோகத்திற்கான பரிகாரம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவது மட்டுமே! 

(29.10.2018) 

புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த. மக்கள் ஆணையைப் பெற்று பிரதமர் ஆசனத்தில் மட்டுமல்ல எந்த ஆசனத்திலும் அமரலாம். அதுவே ஜனநாயக நடைமுறையும் கூட. எங்கள் வாக்குகளுக்கு ஐந்து வருட கால செல்லுபடியாகும் தன்மை இருக்கிறது.

ஆனால் யாருக்கு எந்த கட்சிக்கு வாக்கை வழங்கினோமோ அந்த அடிப்படையில் மட்டுமே செல்லுபடியாகும். கட்சி மாற்றம் ஆட்சி மாற்றம் என்பதற்கெல்லாம் நாம் வாக்களிக்கவில்லை.

ஏதோ டொலரின் பெறுமதியை 125/-க்கு மட்டுப்படுத்தினால் சரி 

(29.10.2018) 

Ads

My Blog List