Friday 25 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01
 

பகுதி - 02

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02
 


பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03
 


பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04
 


பகுதி - 05

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05


பகுதி - 06

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06
 


பகுதி - 07

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07
 


பகுதி - 08 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 09
 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02





பகுதி - 10

அன்று மாலை. கடுமையாகப் பெய்து சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மழையும் ஓரளவு பனியும் மக்களை ஐந்து மணிக்கெல்லாம் வீடுகளுக்குள் முடங்கச் செய்திருந்தன. என் இல்லம் தேடி வந்திருந்த நண்பர்களுடன் பாடசாலை செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். பாடசாலையை நெருங்கியபோது எனக்கு திக்கென்றது. திவ்யா பாடசாலைச் சீருடையில் தனது தோழிகள் புடை சூழ மரத்தடியில் நின்றிருந்தாள். நாங்கள் எங்கள் நடையை மரத்தடியிலிருந்து சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டோம். 

நண்பர்கள் என்னை "போய்ப் பேசுடா மச்சான்" என்று தள்ளிவிட்டனர். அவர்கள் இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்காத நிலையில் நான் தள்ளிவிடப்பட்டதால் ஓரிரு அடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டேன். உடனே முன்தலை மயிரை இலேசாகக் கோதிவிட்டபடி அவர்களை நோக்கி வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மெதுவாகச் சென்றேன். 

அருகில் சென்றதும் " திவ்யா... நா... உ... உங்க... கிட்ட... கொஞ்சம் பேசணும்..." என்றேன்.

"இல்ல... குரூப் ஸ்டடி ... பஸ்சுக்காக நிக்கிறோம்" என்று மெல்லிய குரலில் சொன்னாள் திவ்யா.

"சரி... நாளைக்கு...?" 

"... ம் ..."

அவள் 'ம்' என்று சொன்னதுமே நான் பதிலுக்கு எதுவும் பேசாமல் திரும்பிக்கூட பார்க்காமல் வந்துவிட்டேன். நண்பர்கள் கூட்டத்துடன் ஐக்கியமானதும் விசாரணைகள் துவங்கின. 

"என்னடா பேசுன?" - விசு 

"நாளைக்கு பேசணும்னு சொன்னேன்"

"என்ன சொன்னாங்க எங்க அண்ணி?" - முரளி 

"சரின்னு சொன்னா"

"அப்படின்னா நாளைக்கு நீ போகும்போது நாங்க செஞ்சு தர்ற உன் 'காதல் பூங்கொத்தை'யும் எடுத்துக்கிட்டுப் போற. ஓகேவா?" - சுசி 

"காதல் பூங்கொத்தா? என்னடா உளர்ற? இப்பவே இதெல்லாம் தேவையா?"

"அதெல்லாம் முடியாது" - விசு 

"நீ 'காதல் பூங்கொத்து' குடுக்குற. அவ்வளவுதான்" - அனைவரும் ஒருமித்துச் சொன்னார்கள். நானும் நடப்பது நடக்கட்டுமென்று தலையாட்டி வைத்தேன்.


**********

"சரி" - திவ்யா இப்படிச் சொன்னதும் என் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. மகிழ்ச்சி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. என் உடலின் வற்றிப்போன நதிகளெல்லாம் மகிழ்ச்சி நீரினால் செழிப்படைந்தன. மகிழ்ச்சியின் மிகுதியால் திவ்யாவை இறுகக் கட்டியணைத்து அவளது செவ்விதழ்களில் முத்தமிட்டேன். திவ்யா மறுக்கவில்லை. எனது இதழ்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தனது கோவைப்பழம் போன்று சிவந்த தனது இதழ்களுக்கு ஆணையிட்டாள் திவ்யா. அவளது உள்ளத்தில் தோன்றிய மகிழ்ச்சியை அவளது இதழ்கள் எனக்குத் தெரியப்படுத்தின.

"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற?" - என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்த ஓரிரு நிமிடங்கள் அனுபவித்த துன்பம் சூரியனைக் கண்ட பனி போல் அவளது பதிலால் நொடியில் விலகிப் போனது. ஆனால் அந்த மகிழ்ச்சி காலத்திற்குப் பொறுக்கவில்லையோ என்னவோ நெடுநேரம் நீடிக்கவில்லை. சில நொடிகள் முத்தப் பரிமாற்றத்திற்குப் பின் பேச வார்த்தைகள் இன்றி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி நின்றிருந்தோம். அப்போது திவ்யாவின் முகத்தில் தென்பட்ட மாற்றங்கள் என் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ரேகைகளை அழித்தன. 

திவ்யாவின் கண்கள் செருகுவதை அவதானித்த நொடியே அவள் நிலை தடுமாறுவதையும் அவதானித்த நான் அவள் சுயநினைவிழந்து மயங்கிக் கீழே விழும் நேரத்தில் என் இரு கரங்களினாலும் தாங்கிப் பிடித்தேன். இதைக் கண்டதும் சுசி எங்களை நோக்கி ஓடி வந்தான். அதேநேரம் திவ்யாவின் கார்க் கதவுகளும் திறந்து கொண்டன. அதிலிருந்து திவ்யாவின் பள்ளித்தோழி ரேவதி இறங்கி ஓடி வந்தாள். 

"மச்சான்... என்னாச்சு?" - சுசி 

"தெரியலடா... திடீர்னு மயங்கிட்டா..." - திவ்யாவை கைத்தாங்கலாக என் தோளில் சாய்த்தபடி பதிலளித்தேன்.

"சரி... கொஞ்சம் தண்ணீர் தெளிச்சுப் பாருங்க" - திவ்யாவின் தோழி ரேவதி சொன்னாள். 

உடனே திவ்யாவை எனது காரின் பின் இருக்கையில் கிடத்தினேன். ரேவதி கொடுத்த தண்ணீரை திவ்யாவின் முகத்தில் தெளித்தேன். அவளது கன்னங்களில் தட்டிப் பார்த்தேன். ஆனால் திவ்யா கண்விழிக்கவில்லை. 

"சரி... வா... ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்" என்று சுசி சொன்னதும் எனது காரில் திவ்யாவை ஏற்றிக் கொண்டு சுசியுடன் வைத்தியசாலை நோக்கி விரைந்தேன். ரேவதி தான் வந்த காரில் எங்களைப் பின் தொடர்ந்தாள். சுசி காரை ஓட்டினான். பின் இருக்கையில் எனது மடியில் கிடந்தாள் திவ்யா.

மெதுவாக அவள் நெற்றியில் அலைமோதிக் கொண்டிருந்த கூந்தலை பக்கவாட்டில் எடுத்துவிட்டேன். அவளது தலையைக் கோதினேன். துன்பத்திலும் ஒரு இன்பமாக இன்னும் பல போராட்டங்களின் பின் என்மடி சேர வேண்டிய என் திவ்யா இப்போது என் மடியில் கிடந்தாள். இலேசாகப் புன்னகைத்துக் கொண்டேன் நான்.   

Thursday 24 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09

பகுதி - 09

அன்றைய இரவு இளமை தனது விளையாட்டை என்னில் காட்டத் துவங்கியிருந்தது. திவ்யாவைப் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் என் உறக்கத்தை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பெயரைத் தெரிந்துகொண்டதும் அவளுடன் ஓரிரு நிமிடங்கள் உரையாடக் கிடைத்ததும் என் மனதுக்குள் குதூகலத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. 'அட, இதுதான் காதலா......? தெரியாமப் போச்சே...........!'. இத்தனை மகிழ்ச்சிக்குள்ளும் கொஞ்சம் சோகமும் இழையோடிக் கொண்டுதான் இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, திவ்யா பதிலேதும் சொல்லாமல் போனது. அடுத்தது, நாளை திவ்யாவிடம் பேசக் கூடாது என்று நண்பர்கள் சொன்னது. ஒருவேளை திவ்யாவுக்கு என்மேல் விருப்பம் இருந்து நாளைக் காலை என்னைக் காணாமல் தவித்தால் அவளுடைய பரீட்சை பாதிக்கப்படுமே என்பது தான் என் சிந்தனையாக இருந்தது. ஆனால் நண்பர்களை மீறி செயற்படவும் முடியாது. மகிழ்ச்சி கரைந்து போய் சிந்தனை மட்டுமே எஞ்சியிருந்தது. 

இரவு எத்தனை மணிக்கு உறங்கிப் போனேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஆறுமணிக்கெல்லாம் எழுந்துகொண்டேன். விடிய விடிய பரீட்சைக்குத் தயாரான மாணவனைப் போல் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. உடனே எழுந்து அம்மாவின் தேநீரைப் பருகிவிட்டு அவசர அவசரமாகத் தயாராகி அதே இடத்தைச் சென்றடைந்தேன். அந்த இடத்திலிருந்த மரத்தடிக்குப் பின்னால் நாங்கள் ஒளிந்து கொண்டோம்.

பேரூந்தை விட்டு இறங்கிய திவ்யா சற்று வேகமாக நடந்து, பின் நடையில் ஒரு தளர்வைக் காட்டினாள். என் வரவை எதிர்பார்க்கிறாள் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆனால் நிற்கவோ திரும்பிப் பார்க்கவோ இல்லை என்பது ஏமாற்றமளித்தது. அவள் பாடசாலைக்குள் போனதும் சங்கம் பேச ஆரம்பித்தது.

"என்னடா அவ பாட்டுக்கு போறா?" - முரளி 

"அவளுக்கு உன் மேல லவ் இல்லடா........" - விசு 

"இல்ல.. இருக்குடா...." - சுசி 

"எப்படி?" - முரளி 

"பகல் அவ திரும்பிப் போகும் போது பாரேன்" - சுசி 

"விளையாடாத சுசி...." - நான் 

"பார்டா........ மாப்பிள்ளைக்கு கோவமெல்லாம் வருது..........." - முரளி 

"இப்பவே காதலி மேல அவளோ பாசமா?" - விசு 

"சும்மா இருங்கடா.... விளையாட்டு வினையாகப் போகுது.........." - நான் 

"என்ன ஆனாலும் நாங்க இருக்கோம் ஜெய். பாத்துக்கலாம்." - விசு 

"சரிடா....." - நான் 

அத்தோடு எங்கள் காலை நேரச் சந்திப்பு முடிந்து போனது. அதன் பின் எல்லோரும் அவரவர் வழியில் பிரிந்து போக, மனம் உடன் துணைவர வீடு நோக்கி சிந்தனைகளுடன் நடைபோட்டேன் அன்று மாலை நடக்கப் போவதை சற்றும் அறியாமல்..............


                                                   *********************************


"ம்ம்............ நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"

திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா? நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு' என்கிறாளா? குழப்பத்துடன் நான் பதிலை முன்வைத்தேன்.  


"இல்ல" - மனம் குழப்பத்திலிருந்தாலும் குரலில் தீர்க்கம் சேர்த்து சொன்னேன். 

"ஏன்?"

"உன்னப் பத்தி ஒரு தகவலும் இல்லாம இருந்ததாலயும் பெத்தவங்களோட ஆசைய  நிறைவேத்தணும்னு நினைச்சதாலயும் தான் நந்தினிய கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன். இது விருப்பத்தோட எடுத்த முடிவு இல்ல. கட்டாயத்தின் பேர்ல எடுத்த முடிவு. ஆனா இப்போ உன்னை திரும்பவும் சந்திக்கக் கிடைச்சிருக்கு. அதனால நந்தினிய ஏத்துக்க எனக்கு முடியாது திவ்யா......"

"..............................."

"என்ன திவ்யா......? பேசாம இருக்க?"

"நந்தினிய வேணான்னு சொல்லப் போறீங்களா?"

"ஆமா...."

"இது நியாயமா?"

"ஏன்?"

"நிச்சயம் பண்ணிட்டு......."

"இப்பவே நாகரீகமா வேணான்னு சொல்லிரணும். இல்லாட்டி ஏதாவதொரு சந்தர்ப்பத்துல நானே உளறிடுவேன். அப்போ எல்லாருக்கும் மனக்கஷ்டம் ஆயிரும்."

"........................"

"திவ்யா....."

"இப்போ மட்டும்.........?"

"கஷ்டமாத்தான் இருக்கும். புரிஞ்சிப்பாங்கன்னு நெனைக்கிறேன்."

"நடக்குமா?"

"நம்பிக்கை இல்லையா"

".................."

"திவ்யா............"

"...................."

"என்ன..........? நம்பிக்கை இல்லையா?"

"பார்க்கலாம்.............."

"ஏன் அப்படி சொல்ற?"

"என்ன நடக்குதுன்னு பாக்கத்தானே வேணும்?"

"திவ்யா............"

"சொல்லுங்க........"

"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற.......?" - அவள் சொல்லப் போகும் பதில் எதுவாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விட்டிருந்தது. அவளின் பதிலை எதிர்பார்த்து கேள்விக்குறியோடு அவள் முகத்தை நோக்கினேன்....

Monday 21 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 08

திவ்யா பரீட்சை முடிந்து வரும் நேரம் நெருங்க நெருங்க மனம் படபடவென அடித்துக் கொண்டது. பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து தான் பேரூந்து நிலையத்தை அடைய வேண்டும். பாடசாலைக்கும் பேரூந்து நிலையத்திற்குமான இடைவெளி தான் அவளிடம் பேச உகந்த இடமாக இருந்தது. ஏனெனில் அந்த பிரதேசத்திற்குள் வெளியாரின் நடமாட்டம் இருக்காது. மேலும் அந்த எல்லைக்குள் சொல்லப்பட்ட காதல்கள் ஏராளம். தைரியமாக அந்த இடத்தில் வைத்து பேசி விட்டால் எப்படிப்பட்ட பெண்ணையும் மடக்கிவிட முடியும் என்பது எங்கள் 'ஐதீகம்'.
                           
குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள் திவ்யா. "ஹாய்........." என்ற குரலோடு கையை நீட்டி இடைமறித்து அவளை நிறுத்தி அவள்முன் நின்றேன் நான். திடுக்கிட்டு சட்டென நின்று பார்த்தாள். நான் மறுபடியும் "ஹாய்......" என்றேன்.

"ஹாய் ஜெய்..." என்றாள் புன்னகையோடு. 'அட, நம்ம பெயர் இவளுக்கு எப்படி?' என்று ஆச்சரியப் பட்டுப் போனேன் நான். மேலும் அவள் விலகிச் செல்வாள் என்று பார்த்தால் நெருங்கி வருகிற மாதிரி கதைத்ததும் கூடுதல் ஆச்சரியத்தைத் தந்தது.

"என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்.........?" கேட்டேன்.

"தெரியும்...... அத பிறகு சொல்றேன். உங்கள கல்யாணத்துல பார்த்தது நினைவிருக்கு."

"எனக்கும்..... சரி. உங்க பேரு?"

"சொல்லணுமா?"

"சொல்லலாமே...............?"

"திவ்யா."

"அழகான பேர்."

"சரி. நா வர்றேன்....."

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......"

"அன்னிக்கு கல்யாணத்துல கண்டதுனால தான் இப்ப பேசினேன். உங்கள மறுபடியும் காணுவேன்னு நினைக்கல. கண்டேன். பேசணும்னு தோணிச்சு. பேசிட்டேன். இனி என்ன இருக்கு?"

"ஏன்? நாம கொஞ்சம் பழகலாமே?"

"எப்படி பழகணும்னு எதிர்பார்க்குறீங்க?"

"இல்ல..... உங்கள புடிச்சிருக்கு....."

"கண்டதும் காதலா?"

"அப்படி சொல்லல. பழகிப் பார்க்கலாமே?"

"எங்க வீட்ல இந்த காதல் கத்தரிக்காயெல்லாம் ஏத்துக்க மாட்டங்க."

"அப்போ என்னை பிடிச்சிருக்கு. அப்படித்தானே?"

"..............................................................."

"மௌனம் சம்மதமா?"

அதற்கு மேல் அவள் பேசவில்லை. தன் நடையில் வேகம் சேர்த்து அவ்விடத்தில் இருந்து அகன்றாள். சற்றுத் தூரத்தில் நின்ற தன் தோழிகளுடன் அப்போது வந்த பேரூந்தில் ஏறிப் பயணித்தாள், ஜன்னலினூடே என்னைப் பார்த்துக் கொண்டே.........

திவ்யாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போயிருந்தது என்றாலும் அவளுடன் பேசுவதில் இருந்த தயக்கத்தை நண்பர்கள் வாயிலாக துடைத்தெறிந்து சில நிமிடங்கள் பேசியதில் மனம் குதூகலித்துக் கொண்டது. ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனது மனதின் ஒரு ஓரத்தில் கவலையைத் தந்தது.

"கலக்கிட்ட மச்சான்......." நண்பர்களின் குரல் கேட்டு நினைவுச் சிறையிலிருந்து விடுபட்டேன்.

"பதில் சொல்லாம போறாடா...." - நான்.

"சரி விடு..... நாளைக்கு பார்த்துக்கலாம்" - சுசி

"ம்ம்ம்......" - நான்

"அவள பின்தொடர்ந்து போவோமா?" - முரளி

"பஸ் தான் போயிருச்சில்ல.....?" - சுசி

"போயிருச்சா....? சொல்லவே இல்ல....?" - முரளி

"சும்மா இரு முரளி....." - நான்

"ஏன்டா ஜெய் கோவப்படுற?" - முரளி

"நீ வேற...." - நான்

"நாளைக்கு நீ அவகிட்ட பேச வேணாம் ஜெய்...." - விசு

"ஏன்டா?" - நான்

"நாளைக்கு அவ என்ன செய்றான்னு பார்ப்போம்...." - விசு

"ஆமாண்டா... விசு சொல்றது தான் சரி...." - சுசி

"டேய்... அவ பரீட்சை எழுதுற வரைக்கும் ஏதும் பண்ண வேணான்னு தோணுது......" - நான்

"ஏன்டா?" - முரளி

"ஒரு வேளை அவ நல்லா படிக்கிறவளா இருக்கலாம். அநாவசியமா எதுக்கு குழப்பணும்னு பாக்குறேன்" - நான்

"நீ சொல்றதும் சரி தான்..." - சுசி

"சரிடா... ஏதாச்சும் பார்த்துப் பண்ணலாம்... நாளைக்கு நாம சொன்ன மாதிரி செய்யலாம் என்ன?" - விசு

"சரிடா....." - நான்.

அத்தோடு எங்கள் அன்றைய சந்திப்பும் முடிவடைந்து போக அவரவர் பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.


                                   **********************************************************************


"என்னடா ஒன்னும் பேசாம வாற?"

"திவ்யா என்ன பேசப் போறான்னு தெரியலியே......."

"சரி..... அத விடு... நடக்குறது நடக்கட்டும். மனசைப் போட்டுக் குழப்பிக்காதடா"

"எப்படி சுசி? என்னால முடியல.... ஒரே குழப்பமா இருக்குடா....."

"என்ன குழப்பம் உனக்கு?"

"திவ்யா ஏன் பேசக் கூப்பிட்டிருக்கான்னு தெரியல. அனேகமா நாங்க கடைசியா சந்திச்சப்ப பேசினதப் பத்தித்தான் பேசுவான்னு நினைக்கிறேன்."

"எனக்கும் அப்படித்தான் இருக்குமோன்னு தோணுது ஜே.கே."

"நாங்க நந்தினிய பொண்ணு பார்க்கப் போறதுக்கு முன்னாடி நான் தான் மாப்பிள்ளனு திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்குமா சுசி?"

"சரியா சொல்லத் தெரியலடா..... ஆமா..... போட்டோ குடுக்கலன்னு சொல்லிருந்தேல்ல?"

"ஆமா. நாங்க போட்டோ குடுக்கல. அப்பாவோட நண்பருக்கு தெரிஞ்ச இடம்னு சொல்லிட்டிருந்தாரு."

"ம்ம்.... திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லன்னு தான் நினைக்கிறேன்."

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா என்னோட நம்பர திவ்யா குடுத்ததா தானே நந்தினி சொன்னா?"

"எல்லாக் கேள்விக்கும் திவ்யாவால தான் பதில் சொல்ல முடியும்."

"ம்ம்ம்............." - பெருமூச்செறிந்து கொண்டேன் நான்.

ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தின் பின் திவ்யாவின் ஊரை ஒட்டிய இடத்தில் நாங்கள் வழமையாகச் சந்திக்கும் இடத்தை வந்தடைந்தோம். அங்கே ஏற்கனவே சிவப்பு நிற மாருதி கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கும் நேரத்தில் அந்த மாருதியின் கதவுகளும் திறந்து கொண்டன.

திவ்யா மட்டுமே காரிலிருந்து இறங்கினாள். ஒரு வேளை அவள் மட்டுமே வந்திருக்கக் கூடும். சுசி காருக்கருகிலேயே நின்று கொண்டான். நாங்கள் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் சென்றோம்.

"திவ்யா......"

"ஜே.கே. நல்லா இருக்கீங்களா.......?"

"ம்ம்... இருக்கேன்....... நீ?"

"நானும் இருக்கேன். பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சில்ல "

"ஆமா திவ்யா.... ஆனா இப்ப வரைக்கும் உன்ன மறுபடியும் ஒரு தடவையாவது பார்த்துற மாட்டமான்னு தவிப்பா இருந்திச்சி....."

"எனக்கும் தான்... இப்ப மனசுக்கு ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு...."

"மெலிஞ்சிட்ட போல?"

"ம்ம்... நீங்களும்..."

"சொல்லு திவ்யா....."

"கல்யாணத்துக்கு தயாராயிட்டீங்க போலிருக்கு?"

"இல்ல திவ்யா.... பல நேரங்கள்ல மனசுக்குப் பிடிக்காத வாழ்க்கையைத்தானே அமைச்சுக்க வேண்டியிருக்கு?"

"ம்ம்.... நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"

திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா, நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு என்கிறாளா?'. குழப்பத்துடன் என் பதிலை முன்வைத்தேன்.

Saturday 19 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07

பகுதி - 07

இரவு விழித்தெழும் முன்னரே நான் விழித்துக் கொண்டேன். அசதியில் சற்று தூக்கம் வந்தது. ஆனால் மனதின் எண்ண அலைகள் தூக்கத்தை வாரி இழுத்துச் சென்றுவிட்டன. திவ்யாவை முதன் முதலில் சந்தித்த போது இருவரும் காதல் வசப்படுவோம் என்று நினைத்துப்பார்த்திருக்கவில்லை. எங்களுடையது மிகவும் கண்ணியமான காதல். இதுவரை அவளைத் தொட்டதோ முத்தமிட்டதோ கிடையாது. பிரிவை சந்திக்க நேர்ந்த போது என்தோளில் சாய்ந்து அழுதாள் திவ்யா. அதுவே முதலும் கடைசியுமாய் எங்களின் ஸ்பரிசமாகிப் போனது. விடிய விடிய குறுஞ்செய்திகளும் விடிந்த பிறகும் தொலைபேசிக்குள்ளேயே தொலைந்து போவதும் எங்கள் காதலில் இருக்கவே இல்லை. ரகசிய இடங்களில் சந்தித்ததுமில்லை. அதனால் தான் கண்ணியமான காதல் என்றேன்.                        

திவ்யா என்னிலும் இரண்டு வயது இளையவள். அவளை முதன்முதலில் எங்கள் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் வைத்துத்தான் கண்டேன். எங்கள் வீட்டில் யாருக்கும் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததாலும் நான் பெரிய மனிதனாக இருந்ததாலும் (இருவது வயசுன்னா பெரிய மனுசன் தானே?) நான் அந்தத் திருமண நிகழ்வில் கலந்து 'சிறப்பிக்க' எனது நண்பன் சுசியுடன் சென்றிருந்தேன். பரிசு கொடுக்கும் நேரத்தில் சுசி காணாமல் போய்விட, நான் தனியாள் என்பதால் திவ்யாவின் குடும்பத்தினரோடு சேர்ந்து நின்று ஒளிப்படம் (Photo) எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இருவர் கண்களும் மட்டும் சந்தித்துக் கொண்டன. திவ்யாவுக்கு அருகில் நான்.

சில நாட்கள் கழித்து அந்தத் திருமண ஒளிப்படத் தொகுப்பை (Wedding Photo Album) காண நேர்ந்த போது "ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கு மச்சான்........" என்று சுசி உட்பட அங்கு குழுமியிருந்த நண்பர் வட்டம் முழுவதுமே என்னைக் கிண்டலடித்தது. எங்கள் உயர்தர வகுப்பின் முக்கால்வாசி நண்பர் கூட்டம் அப்போது ஊரிலேயே இருந்தது. இப்போது தான் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையில்..... சில நாட்களுக்கு அந்தக் கிண்டல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் மீது எனக்கு எந்தவொரு அபிப்பிராயமும் உடனே ஏற்படாவிட்டாலும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது 'கௌரவமான' விடயம் என்பதால் நானும் கிண்டல்களோடு சங்கமமாகிப் போனேன்.

அந்த திருமண வைபவம் முடிந்து ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். திவ்யா பாடசாலைச் சீருடையில் ஓரிரு புத்தகங்கள் மற்றும் சில எழுதுகருவிகள் சகிதம் பள்ளி மாணவியருடன் நடந்து செல்வதை எங்கள் 'உளவுத்துறை' அவதானித்து விட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தலைப்புச் செய்தியுடன் விரிவான செய்திகள் என் கைப்பேசியின் சிணுங்கலைத் தொடர்ந்து 'ஒலி'பரப்பானது. அது உயர்தரப் பரீட்சைக் காலம். திவ்யா கல்வி கற்ற பாடசாலைக்கான பரீட்சை மத்திய நிலையம் (Examination Centre) எங்கள் ஊரிலுள்ள எமது பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளே 'உளவுத்துறை' இதை அறிந்து கொண்டதால் பரீட்சை நடைபெறும் அந்த ஒரு மாத காலம் என்பாடு படு திண்டாட்டமாக இருந்தது.

"உன் தேவதை உன்னைத் தேடி இவ்வளவு சீக்கிரம் வருவான்னு நாங்க எதிர்பார்க்கல மச்சான்....."

"டேய்......... சும்மா இருங்கடா. அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல......."

"அத நீ சொல்லக் கூடாது. நாங்க சொல்லணும்... இன்னிக்கு பகல் அவ பரீட்சை முடிஞ்சு வர்றப்ப நீ உன் காதலைச் சொல்ற........."

அதிர்ந்து போனேன் நான். 'என்ன............???? காதலைச் சொல்வதா? இவங்ககிட்ட அவள வச்சு கதை அளந்தது இப்படி வம்பாகும்னு தெரியாமப் போச்சே.........'

"அதெப்படிடா.....? இன்னிக்கே...??"

"சரி... நீ காதலெல்லாம் சொல்லவேணாம். எங்க முன்னாடி ஏதாச்சும் பேசு. அது போதும்........"

ஒருவன் சொன்னதை மற்றவர்களும் ஆமோதிக்க நான் தலையைக் கூட ஆட்டாமல் தீர்மானம் 'உளவுத்துறை ரகசிய அலுவலகத்தில்' நிறைவேற்றப்பட்டது. 'நானும் கொஞ்சம் நல்லவன் இல்லையா? அதனால எப்படியும் இன்னிக்கு அவள கலாய்ச்சு நாம யாருன்னு இவங்களுக்கு காட்டணும்.' என்று நானும் மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டேன்.

                      ***************************************************

என்னுடைய கைப்பேசி பாட ஆரம்பிக்க நினைவுகளின் ஜன்னல்களை அடைத்து விட்டு நிஜ உலகின் ஜன்னல்களை திறந்து வைத்தேன். அழைப்பில் சுசி.

"காலை வணக்கம் ஜே .கே ."

"காலை வணக்கம் சுசி"

"என்னடா பண்ற?"

"தூக்கம் வரலடா. உக்காந்து யோசிச்சிட்டிருந்தேன்...."

"இப்ப என்னடா யோசனை...?"

"உனக்கு ஞாபகமிருக்கா? நாம முதன் முதல்ல திவ்யாவகலாய்ச்சது...... என்னை அவளுக்கு பூ குடுக்க வச்சது........"

"...................."

"என்ன சுசி? மறந்துட்டியா?"

"எப்படிடா மறப்பேன்? பூ குடுக்க சொன்னதே நான் தானே.....?"

                             

"ம்ம்ம்...... நெனச்சுப் பார்க்கும் போது மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தோஷம்டா......"

"............. சரிடா...........கிளம்பத் தயாராகு......... நா இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வாறேன்........"

"சரி சுசி....."

அழைப்பைத் துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். காலை ஆறு மணி முப்பது நிமிடம். குளித்து முடித்து விட்டு அம்மாவின் தேநீரைப் பருகிக் கொண்டே உடை மாற்றிக் கொண்டேன். சரியாக ஏழேகாலுக்கு சுசி காருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டில் அலுவலக விடயமாகச்
செல்வதாகக் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறி புறப்பட்டோம். மழைக்கும் ஏதோ சோகம் போலும். இரகசியமாய் அழுவது போல் இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கார் சீறிப் பாய்ந்தது என் கேள்விகளுக்கான
விடைகளைத் தேடி........

Friday 18 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06

பகுதி - 06

திவ்யாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் நான் "ஹலோ" என்றேன். ஆனால் மறு முனையில் பதில் இல்லை. ஓரிரு வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப் பட்டது. இணைப்புக் கோளாறா அல்லது நான் பேசவில்லை என்று இணைப்பைத் துண்டித்து விட்டாளா என்பதை அறிந்து கொள்வதற்காக நான் நந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண் குரல் சொல்லிப் போனது.

'ஒரு வேளை இது திவ்யா - நந்தினி யின் விளையாட்டாக இருக்குமோ?' என்று கூட என் மனம் யோசித்தது. நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக அல்லவா இருக்கிறது?

'இது திவ்யாவின் விளையாட்டாக இருந்தால் இந்த பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றே இருக்காதே? ஆமாம். ஆனால் திவ்யாவுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு? நந்தினி சொன்னது உண்மையாக இருக்குமா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? எனது தொலைபேசி இலக்கத்தை திவ்யாதான் கொடுத்தாளா? அல்லது வேறு யாரும் இருக்கக் கூடுமா?' - என்று என் மனதினுள் பலவாறான கேள்விகள் மாறி மாறி எழுந்த வண்ணமிருந்தன. 

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திவ்யா - நந்தினி குடும்பத்தினருக்கிடையில் ஏதோ ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. அது எது என்பது தான் புதிராக இருக்கிறது.

'ஆமா... திவ்யாவோட அம்மா அப்பா இன்னிக்கு அங்க வந்திருக்கலையே...... நமக்குத்தான் அவங்கள தெரியுமே....? இத நாம முன்னமே யோசிக்கலையே?' - மனம் இப்போது தான் இதை மீட்டெடுத்திருந்தது. வர வர குழப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை. 

'நாளை திவ்யாவை சந்தித்தால் எல்லாம் தெரிந்துவிடப் போகிறது. அதுவரை பொறுத்திருப்போம்.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் அதையெல்லாம் பொருட்படுத்துவதாயில்லை. இன்றைய இரவின் சிறைக் கைதி நான்தான் போலும். மிகக்குறுகிய நேரத்தில் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறிப் போகிறது? பலநேரங்களில்  மிகக்குறுகிய கால அவகாசத்தில் தான் எனது தீர்மானங்களை எடுக்கும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன். ஏன் எனது காதலின் முடிவைத் தீர்மானிக்கும் சமயத்தில் கூட. இப்போதும் அதே நிலைதான். 

ஆனால் இன்றாவது கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை கைவசம் வைத்திருக்கிறேன். ஆனால் அன்று? வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்.... அதைப்பற்றி நினைத்தாலே உடல் ஒருமாதிரி சிலிர்த்துக் கொள்கிறது. கண்கள் குளமாகின்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டு விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன். 

இரவு ஒன்பது மணி! இரவு உணவுக்கான நேரம். அத்தனை நினைவுச் சுமைகளுக்கு மத்தியிலும் அம்மாவின் சாப்பாட்டு வாசனை மூக்கைச் சற்று பதம் பார்க்கத்தான் செய்தது. திவ்யாவும் நன்றாகச் சமைப்பாள். எதையாவது புதிதாக ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டு அதைக் கொண்டு வருவாள். அந்தப் பெயர் வாய்க்குள் நுழைவதே இல்லை. ஆனால் அந்த புதிய சமையல்...... அப்படி ஒரு அருமை.

"திவ்யா...... உன் கைப்பக்குவத்துக்கு ஒரு கைக்காப்பு செஞ்சு போடலாம்னு இருக்கேன்...."

"என்ன கிண்டலா?"

"இல்ல... நிஜமாத்தான். அசத்திட்ட...."

தலையைக் கீழே குனிந்துகொண்டு தன் முகத்தில் வெட்கம் படர மென்மையாய்ப் புன்னகைத்தாள்.

"காப்பெல்லாம் வேணா... நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும்...."

"கண்டிப்பா....."

இந்நிகழ்ச்சி நடந்து மூன்றாண்டுகளாவது இருக்கும். இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்.....

எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள். எப்படியோ சரியாக இரண்டாண்டுகள் உருண்டோடிவிட்டன. நிச்சயதார்த்தத்தில் வைத்து திவ்யாவைக் கண்டதும் இது என் நினைவுக்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அப்படியே கசக்கிப் பிழிந்தது போலிருந்தது. அதே தினத்திலேயே மீண்டும் சந்தித்திருக்கிறோமே? காலம் 'பிரிவு' என்னும் எங்கள் குழந்தையை காலனுக்கு காணிக்கையாக்க முடிவு செய்து விட்டதோ? 

அம்மா உணவு உண்ண அழைத்ததும் ஒரு செயற்கை இயல்பு நிலையை எனக்குள் வரவழைத்துக் கொண்டு அனைவருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவை கட்டாயப் படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தேன். சாப்பிடும் போது நாங்கள் எதுவும் கதைப்பதில்லை. அது அப்பாவுக்கு பிடிக்காது. எங்களுடனேயே அம்மாவும் சாப்பிட்டுவிடுவார். எல்லோரும் சாப்பிட்டானதும் எனது அறைக்கு நான் திரும்ப எத்தனித்த வேளை "என்னண்ணா...... பொண்ணப் பத்தி எதுவுமே சொல்லாம போற?" என்று குறும்பாகக் கேட்டாள் தங்கை நிவேதிதா.

அதிர்ச்சியில் ஒரு கணம் நான் உறைந்தே போனேன். 'இவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே' என்று குழம்பி நின்றேன்.

"மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா?" - நிவேதிதா தன் பிடியை விடுவதாயில்லை.

"அதப் பத்தி இன்னும் யோசிக்கல....." தயங்கியவாறே சொன்னேன் நான்.

"இதப் பாருப்பா... யோசிக்கிறேன்னு சொல்லியே காலத்தைக் கடத்திடலாம்னு நினைக்காத. இந்த தடவை ஒரு முடிவ சொல்லிரு. இந்தக் கிழமைக்குள்ள சொன்னாத்தான் நல்ல நாளெல்லாம் பார்க்க வசதியாயிருக்கும். அதுவுமில்லாம சீக்கிரமா ஒரு முடிவ சொன்னாத்தானே நல்லாருக்கும்?" அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். செய்வதறியாது குழம்பிப் போனேன் நான்.

"சரிப்பா.... நல்லா யோசிச்சிட்டு உன் முடிவ சொல்லு. களைப்பா இருப்ப.... இப்ப போய் தூங்கு" என்று அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியைத் தந்தார் அப்பா.

"சரிப்பா" என்றபடி என் அறைக்குள் வந்து கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். மனம் கடலலையென கொந்தளித்துக் கொண்டிருந்தது. இரவின் சிறைக்குள் நினைவுகள் என்னும் வேலிகளிட்டு பூட்டப்பட்டேன் நான். காவல் செய்த களைப்பின் மிகுதியில் இரவும் நினைவுகளும் சற்றுக் கண்ணயர்ந்ததொரு பொழுதில் சற்றே உறங்கிப் போனேன் நான்.

Friday 11 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05

பகுதி - 05

நந்தினியின் மணமகள் தோழியாக வந்தது திவ்யாதான் என்பதைச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து மௌனமானான் சுசி. நான் தொடர்ந்து பேசலானேன்.

"அது மட்டுமில்ல. நாங்க வெளில வர்றப்ப கதவுல சாஞ்சி நின்னுக்கிட்டு அவ பார்த்த பார்வ என்னை இன்னமும் என்னமோ பண்ணுதுடா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் சுசி."

"அது எப்படிடா முடியும்?" சுசி தன் மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான்.

"அவ என்னை நாளைக்கு எங்க வழமையான இடத்துல சந்திக்க வரச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்கா....


"திவ்யாவா இது?" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாகக் கேட்டான்.

"ம்...... அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல."

"அன்னிக்கு பிரிஞ்சிருவோம்னு முடிவெடுத்ததும் அவதான். இன்னிக்கு பேசணும்னு சொல்லிருக்கதும் அவதான்."

சுசி இப்படிச் சொன்னதும் திவ்யாவுடனான கடைசிச் சந்திப்பு மனதில் வந்து நிழலாடியதனால் விழியோரமாய் கண்ணீர் வந்து சற்று எட்டிப் பார்த்தது. சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டேன். என் நிலை கண்டு எதுவும் கூற முடியாமல் சிறிது மௌனம் காத்தான் சுசி.

சில நிமிட இடைவெளிகளின் பின் "ஒன்ணும் யோசிக்காத. நடக்குறத அது பாட்டுல விடு. நாளைக்கு காலைல கிளம்பத் தயாராயிரு. ஜீவாவோட காரை எடுத்துக்கிட்டு வாறேன். நாம போகலாம். சரியா?" என்று கேட்டான் சுசி.

'சரிடா' என்பதாக தலையை மட்டும் ஆட்டினேன். பேசினால் எங்கே அழுதுவிடுவேனோ என்று பயமாய் இருந்தது. சூழ்நிலையைப் புரிந்து கொண்ட சுசி "வர்றேண்டா" என்று என் தோளைத் தொட்டு சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற பின் திவ்யாவின் யோசனைகளில் மூழ்கியிருந்த என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. கீழ்த்தளத்திலிருந்து அம்மாதான் என்னை அழைத்தார்.

"ஜெய்... எங்கப்பா இருக்க....?"

"இதோ வர்றேம்மா......" என்று குரல் கொடுத்தவாறே சென்றேன்.

"இந்த டீய கொஞ்சம் குடிச்சிட்டுப் போப்பா...." என்றவாறே அம்மா என் கைகளில் தந்த தேநீரை எடுத்துக் கொண்டு எனதறைக்குள் சென்று பருக ஆரம்பித்தேன். அம்மாவின் தேநீர் ஒரு புது உற்சாகத்தை வழங்கியது போலிருந்தது. சற்றே சிந்தனைகளில் இருந்து விடுபட்டவனாய் காணப்பட்டேன். அப்போது 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தின் 'போ... போ... நீ எங்க வேணா போ...' என்ற பாடலை என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. ஒரு புதிய இலக்கம். தேநீர்க் கோப்பையை மேசை மேல் வைத்துவிட்டு யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் பதிலளித்தேன்.



"ஹலோ.."

மறுமுனையில் "ஹலோ.." என்றது ஒரு இனிய பெண் குரல். பரிச்சயமில்லை என்று தீர்ப்பளித்தது மனம்.

"நீங்க.....?"

"நந்தினி"

"நந்தினியா?"

"என்ன பகல் தான் வந்து பார்த்துட்டு போனீங்க.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"

"ஒ... நீங்களா?"

"ஏன் எடுக்கக் கூடாதா ?"

"அதுக்கில்ல.... என் நம்பர்...... எப்படி...?"

"அதுவா? உங்க ப்ரண்டு தந்தாங்க."

"ப்ரெண்டா ? யாரது?"

"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க? திவ்யா உங்க ப்ரெண்டு இல்லையா?"

நந்தினி இப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் எதுவும் சொல்லவில்லை.

"...................................."

"ஹலோ..."

சற்று சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"ம்.... திவ்யா தான் கொடுத்தாங்களா?"

"ஆமா"

"உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" தயங்கியவாறே கேட்டேன்.

"கேளுங்க"

"திவ்யாவ உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இத கேக்க ஏன் தயங்குறீங்க? திவ்யா என் அக்கா."

"அக்காவா?" சற்றே அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டேன்.

"ஏன்? இருக்கக் கூடாதா ?"

"திவ்யாவுக்கு  அப்படி யாரும் இல்லையே......."

"நா என்ன பொய்யா சொல்றேன்?"

"ஆமா. நிச்சயமா அப்படி யாரும் இல்ல."

"சரி.... சரி..... கோவப்படாதீங்க.... திவ்யா என் அத்தைப் பொண்ணு. போதுமா?"

நான் பேசவில்லை. இப்போது என் மனதுக்குள் இருந்த குழப்பம் அதிகமாகியிருந்தது. திவ்யா ஏன் இவளுக்கு என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்? திவ்யாதான் கொடுத்தாளா? நந்தினி சொல்வது போல திவ்யா உறவுக்காரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே என் மனம் யூகித்தது. அவளிடமிருந்து மேலதிகமாக ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று அறிந்து கொள்ளும் நோக்குடன் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.......

Thursday 10 November 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல்- அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல். 

உன் பதில் மடல் கண்டேன். மகிழ்ச்சி. இல்லற வாழ்வின் அடுத்த கட்டத்தில் நான் அடியெடுத்து வைத்துள்ளது குறித்து உனது வாழ்த்துக்களுக்கு நன்றி. உனது அறிவுரைகள் பெறுமதி மிக்கவை. சவால் மிகுந்த எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைக்க நம் குழந்தைகளுக்கு நிறையவே கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. பழைமையைக் கற்றுக் கொடுக்கவும் புதுமையை பழக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தையும் அதன் சவால்களையும் தைரியத்துடன் முகம் கொடுக்கக் கற்றுத்தர வேண்டும். புத்தகக் கல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அனுபவக் கல்வியே வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்த வேண்டும். மேலும் முக்கியமாக தமிழைக் கற்றுத்தர வேண்டும். நம்மில் பலர் மறந்துவிடும் முக்கியமான விடயம் இது. தமிழில் எழுத, பேச, வாசிக்க மட்டுமல்லாமல் தமிழனாகவே வாழவும் கற்றுத்தர வேண்டும். சுயமாக இயங்கவும் முடிவெடுக்கவும் கற்றுத்தர வேண்டும். ஆண் - பெண் உறவைக் கற்றுத்தர வேண்டும். காதலைக் கற்றுத்தர வேண்டும். மீண்டும் உனது அறிவுரைகளுக்கு நன்றி.

நம் நட்பு என்றென்றும் தொடர வேண்டும். நாலடியார் பாடலைப் போல இணைபிரியாதிருக்க வேண்டும் தோழனே! எழுத்துக்களின் தரம் மிக முக்கியமானது. மொழியின் வளர்ச்சியை அதுதான் தீர்மானிக்கிறது. பேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் போலியான எழுத்துக்கள் அதிகம் வலம் வருகின்றன. அதுதான் கவலையளிக்கிறது. சமூக வலைத்தளங்கள் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் தமிழை சீரழிப்பது பெரும் வேதனைக்குரியது. காலம் தான் காப்பாற்ற வேண்டும். 




'வானவல்லி' வாசித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. நான் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாசிக்கும் புத்தகம் இது. எல்லோரும் கட்டாயம் இப்புதினத்தை வாசிக்க வேண்டும். சரித்திர ஆதாரங்களுடன் எழுதியிருப்பது நல்லது. வென்வேல் சென்னியின் முதல் இரண்டு பாகங்களை 2017 இல் எதிர்பார்க்கிறேன். வென்வேல் சென்னியின் திருத்தங்களுக்காக என்னையும் தேர்ந்தெடுத்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி நண்பனே! வானவல்லி தொடர்பில் சிறப்புக் கட்டுரைத் தொடர் ஒன்றை விரைவில் எதிர்பார்க்கலாம். உனது தொடர் உற்சாகம் எனக்குள் புது சக்தியை உருவாக்கியிருக்கிறது. அதனால் தற்போது நிறைய எழுதவும் வாசிக்கவும் செய்கிறேன். நன்றிகள் பல.

உனது தொழில் சூழல் பற்றி கடந்த கடிதத்தில் விசாரித்திருந்தேன். பதில் இல்லை. ஏன்? வாசுகி என்ன சொல்கிறார்? அவரைப் பற்றியும் கொஞ்சம் கூறேன்! உனது இலட்சியம் என்ன? உனது வாழ்க்கையை நீ எதை நோக்கி வழிநடத்திச் செல்கிறாய்? உனது இலட்சியப் பாதையில் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறாய்? உன் இலட்சியத்திற்காக நீ சந்தித்துவரும் சவால்கள் என்ன?

இந்தியாவில் 2016.11.09 முதல் ரூ 500 மற்றும் 1000 ஆகியன செல்லாக் காசாக்கப்பட்டமை தொடர்பில் சாமானியனாக உன் கருத்து என்ன? கறுப்புப் பணத்தை இவ்வாறான நடவடிக்கைகளால் ஒழித்துவிட முடியுமா என்ன? உங்கள் மோடிஜி இன்னும் என்னவெல்லாம் பண்ணக் காத்திருக்கிறாரோ? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமை குறித்து உனது கருத்தென்ன?

மூன்றாவது கடிதமும் உன் கையில். இத்தனை கடிதங்களை வலையில் உனக்கு எழுதியது நானாகத்தான் இருப்பேன். என் கடிதம் கேள்விகளால் நிரம்பி வழிகிறது என நினைக்கிறேன். இன்னும் பலநூறு கடிதங்கள் நமக்குள் பரிமாறப்பட வேண்டும். நமக்குள் அத்தனை பேச வேண்டியிருக்கிறது. இக்கடிதத்தில் உரிமைப் பிரச்சினை ஏதும் இருக்காதென நம்புகிறேன். உன் பதில் கடிதம் கண்டதும் இன்னும் பேசலாம்.

நன்றி

இப்படிக்கு
உடன் பிறவா நண்பன்
சிகரம் பாரதி. 

Monday 7 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

பகுதி - 04

எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.

திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே  இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

"நான் உங்களோடு கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும். நாளை நமது வழமையான இடத்தில் சந்திப்போம்."



குறுஞ்செய்தியைப் படித்ததும் திவ்யா ஒரு முடிவோடு தான் பேச அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வாகனத்தில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். அப்போது "ஜெய்... வரலையா..?" என்ற அப்பாவின் குரல் என்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.

"வாறேம்ப்பா...." என்றபடி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் எங்கள் இல்லம் நோக்கி விரைந்தது. அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் சிந்தனையின் அழுத்தம் அதிகரித்தது.

நாங்கள் வீட்டை வந்தடைந்த போது நேரம் மாலை ஐந்து மணியாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனது அறைக்குள் சென்று ஆருயிர்த் தோழன் சுசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

"ஹ... ஹலோ சு.. சுசி..."

"ஜே.கே? என்னடா பதட்டமா இருக்க?"

"ஆமாண்டா. பதட்டம் தான். என்ன செய்றதுனே தெரியலடா..."

"ஏன்? போன இடத்துல ஏதும் பிரச்சினையா?"

"பிரச்சினை ஒன்னும் இல்ல... ஆனா.."

"ஆனா....?"

"சரி, அத விடு... இப்ப நீ எங்க இருக்க?"

"இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வந்துட்டிருந்தேன். நீ எடுத்துட்ட..."

"எங்க வீட்டுக்குக் கொஞ்சம் வர முடியுமா?"

"சரிடா... நா வர்றேன்."

சரியாக ஆறு மணிக்கு சுசி வீட்டுக்கு வந்து விட்டான். என் பெற்றோருடன் உரையாடியபின் என் அறைக்குள் வந்தவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன்.


ஐந்து நிமிடங்கள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுசிதான் முதலில் பேசத் தொடங்கினான்.


"பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்காமே? அம்மா சொன்னாங்க."

"..................."

"ஏன்டா உனக்குப் பிடிக்கலையா?"

"விஷயமே வேற சுசி..."

"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."

"ஆமா சுசி. திவ்யாவ எனக்கு எப்படிடா புடிக்காமப் போகும்?"

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி."

Sunday 6 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

பகுதி - 03

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில்  ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர்.



இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரின் திருப்திக்காகவே இந்தத் திருமணம் என்பதால் எப்படியும் 'சம்மதம்' என்று சொல்லத்தானே போகிறோம்? பிறகெதற்கு இதெல்லாம் என்றது என் மனது. ஆனால் வெளிப்படையாக எதையும் நான் கூறத் தலைப்படவில்லை.


பெண்ணின் பெயர் நந்தினி. வயது 25. பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகத் தொழில் புரிகிறாள். அதிகம் பேசாத அடக்கமான பெண். இது தான் மணமகளைப் பற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சுய விபரக் கோவை.


மணப் பெண் வரவேற்பறைக்குள் வந்த அந்த நிமிடம் என் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.


"திவ்யா.... நீ எப்படி இங்கே......?"- எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

"என் காதலி திவ்யா இங்கு எப்படி? அதுவும் மணப் பெண் தோழியாக? நந்தினி என்ற பெயரில் தோழிகள் யாரும் அவளுக்கு இல்லையே..........?". மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலை எங்கே போய் தேடுவேன்?


கண்ணீர் கண்களை முட்டிக் கொண்டு வர எத்தனித்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக திவ்யாவை பார்த்து, பேசி இன்றோடு இரண்டு வருடங்கள். வன வாசம் முடிந்து வந்திருக்கிறாளா? என்னால் சபையில் எதையும் வாய்விட்டு கூறவோ கேட்கவோ இயலாத தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டு தவித்தேன்.


என் மனம் இப்படிப் பலவாறான சிந்தனைகளினால் துடித்துக் கொண்டிருக்க, திவ்யா என்னைக் கண்டதும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அப்பா என் தோளைத் தொட்டு "ஜெய்.... பொண்ணப் புடிச்சிருக்காப்பா?" என்று கேட்ட போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன். திவ்யாவை மீண்டும் காணாது போயிருந்தால் நிச்சயம் சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எப்படி? செய்வதறியாத சூழ்நிலையில் ஒருவித தயக்கத்துடன் "கொஞ்சம் யோசிக்கணும்ப்பா...." என்றேன். "சரி" என்றவர் அவ்வாறே பேசி நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.


வெளியே செல்லும்போது எல்லோருக்கும் பின்தங்கி மெதுவாக நடந்தபடி திவ்யாவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தேன். உள் அறையில் இருந்து வரவேற்பறைக்குள் வரும் கதவில் சாய்ந்து நின்றபடி கலங்கிய கண்களுடன் என்னையே திவ்யா பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

Wednesday 2 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02

பகுதி - 01


பகுதி - 02

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.

என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.

இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

"ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்து ஐந்து நிமிடங்களில் நான் தயாராகி வெளியே வந்தேன். அடுத்த சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காகக்  காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........

Saturday 29 October 2016

விதியை நம்புகிறீர்களா?

தூறல்  - 02                  
  
'சே!எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 

அதென்ன விதி? அதனை எழுதுவது யார்? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா? நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள்? குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா? உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா? கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு  விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்?

மேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளும், இந்துப் பையனை திருமணம் செய்வாய் என்று கிறிஸ்தவக் கடவுளும் விதிஎழுத முடியுமா? அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன? நம்முடைய தவறுகளுக்கு விதியை காரணம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே விதியை நம்புவதை விடுத்து மதியை நம்புங்கள். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும்!

பதிவின் தலைப்பு :  விதியை நம்புகிறீர்களா?
வலைப்பதிவு           : தூறல்கள்
வெளியிட்ட திகதி : 06.09.2010 , திங்கட்கிழமை.

Tuesday 25 October 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் - 02

பேரன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம் நண்பா!

உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

நீ கேள்விப் பட்டிருப்பாய். வயிற்றில் இருக்கும் குழந்தையின் செவிப்புலன்கள் இருபது வாரத்திற்குள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும் என்று. ஐந்து மாதம் கழித்து குழந்தையால் நாம் பேசுவதை நன்றாக கேட்க இயலும். இப்போதிலிருந்தே குழந்தைக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்கலாம், என்னென்ன கதைகளைக் கூறலாம் என்று சேகரித்து வைத்துக் கொள். இன்றைய குழந்தை பிறந்த அடுத்த தினமே ஸ்மார்ட் போனையும், டீ.வி ரிமோட்டையும் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை அதன் போக்கிற்கு போகோ சேனலைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நீ செய்யாதே. தினமும் குழந்தையுடன் பேசு. கதைகளைக் கூறு. புத்தகங்களைப் படி. நிறைய புது இடத்திற்கு அழைத்துச் செல். புது உலகைக் காட்டு. குழந்தை புரிந்துகொள்ளட்டும். குழந்தையை அதன் போக்கிற்கு வளர விடு. சுதந்திரமாக முடிவெடுக் கற்றுக்கொடு. அதற்காகக் கட்டுப்பாடு இல்லாமலும் வளர்க்கச் சொல்லவில்லை. உன்னைப் போன்றே குழந்தையும் பல கதைகளைக் கேட்டு வளரட்டும். நாம் கூறும் கதைகளில் அவனே ராஜாவாக வாழட்டும்.

தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது வேறு. பழக்குவது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நீ அறிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

முதல் கடிதத்தில் நீ, வா, போ என்று உரிமையுடன் அழைத்திருந்தாய். ஆனால், கடந்த கடிதத்தில் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு என்று பெரும் மரியாதையுடன் தொடங்கியிருக்கிறாய். இந்த மரியாதை எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. சரி, அதை விடுவோம். நாம் இப்பொழுதே பழகத் தொடங்கியிருக்கிறோம். ஆனால் அதற்குள் பிரிவினைப் பற்றி கவலைப் படுகிறாய், அதற்கு அவசியமே இல்லை என்று கருதுகிறேன் நான். 

'கனைகடல் தண்சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித் 
தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு'

என்ற நாலடியார் பாடலைப் போன்றே நம் நட்பும் வளரும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதில் உனக்கு அணுவளவும் ஐயம் வேண்டாம் நண்பா.

வரவர எழுத்தின் தரம் தாழ்ந்து கொண்டு வருவதாக வருத்தப்பட்டாய். ஒரு வரியை உடைத்துப் போட்டாலே அதுதான் கவிதை என்கிறார்கள். நாமும் தொடக்கத்தில் அப்படித்தான் எழுதினோம் என்பதை மறக்கக் கூடாது நண்பா. மனிதன் கூட ஒரு காலத்தில் ஆடையின்றி சுற்றித்தான் இன்றைய நாகரீகத்தினை கற்றுக்கொண்டான். எழுத்தும் அப்படித்தான். தொடக்கத்தில் அது அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். வெளிப்படுத்த வெளிப்படுத்தத் தான் அது தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டு சிறப்பாக வெளிப்படும். ஆதலால் அதை பற்றி நீ கவலைப் படாதே. எதுவுமே எழுதாமல் இருப்பதற்குப் பதில் முகப்புப் புத்தகத்திலாவது ஏதாவது எழுதுகிறார்களே, அதுவரை நாம் மகிழ்ச்சி அடையவே வேண்டும். என்னைக் கேட்டால் ஓட இயலாத போது நடக்க வேண்டும். நடக்க இயலாத போது நகர வேண்டும். நகர இயலாத போது உருள வேண்டும். உருள இயலாத போது முயற்சிக்க வேண்டும். ஆதலால் அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். எழுதுபவர்கள் தம் எழுத்தினை மேம்படுத்திக் கொண்டிருப்பது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம் எழுதுவதே உலகின் ஆகச்சிறந்த இலக்கியம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் தமிழ் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு சாரு நிவேதிதா. அவரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருப்பாய். மிகச் சிறந்த எழுத்தாளர். ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிப் போய் விட்டார். அவர் கதை நமக்கு வேண்டாம்.

வேலைப்பளு வரவர அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆதலால்,வென்வேல் சென்னியின் வேகம் வானவல்லியுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். இருந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் நவம்பருக்குள் சென்னி முதல் பாகத்தை முடித்ததுவிடுவேன் என்று நம்புகிறேன். இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது. 2018 சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்னி மொத்தமாக வெளியிடப்படும்.

நீ பத்திரமாக இரு. எந்தச் சூழலிலும் எழுதுவதை நிறுத்தாதே. தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. மற்றவர்கள் வாங்கும் லைக்குகளை எண்ணி மயங்காதே... அது உனது வளர்ச்சியை பாதிக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நமது தாத்தா கூறியிருக்கிறார். ஆதலால் எந்த முயற்சி மேற்கொண்டாலும் அது பெரியதாகவே இருக்கட்டும். வெற்றி உனதாகட்டும்.

அன்புடன்...
சி.வெற்றிவேல்.

  _________________________________________________________________________________

கடிதத்திற்கு நன்றி நண்பா. எனது பதில் கடிதம் விரைவில்...

இக்கடிதத்தை நண்பர் வெற்றிவேல் அவர்களின் தளத்தில் காண:


Ads

My Blog List