Saturday 19 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07

பகுதி - 07

இரவு விழித்தெழும் முன்னரே நான் விழித்துக் கொண்டேன். அசதியில் சற்று தூக்கம் வந்தது. ஆனால் மனதின் எண்ண அலைகள் தூக்கத்தை வாரி இழுத்துச் சென்றுவிட்டன. திவ்யாவை முதன் முதலில் சந்தித்த போது இருவரும் காதல் வசப்படுவோம் என்று நினைத்துப்பார்த்திருக்கவில்லை. எங்களுடையது மிகவும் கண்ணியமான காதல். இதுவரை அவளைத் தொட்டதோ முத்தமிட்டதோ கிடையாது. பிரிவை சந்திக்க நேர்ந்த போது என்தோளில் சாய்ந்து அழுதாள் திவ்யா. அதுவே முதலும் கடைசியுமாய் எங்களின் ஸ்பரிசமாகிப் போனது. விடிய விடிய குறுஞ்செய்திகளும் விடிந்த பிறகும் தொலைபேசிக்குள்ளேயே தொலைந்து போவதும் எங்கள் காதலில் இருக்கவே இல்லை. ரகசிய இடங்களில் சந்தித்ததுமில்லை. அதனால் தான் கண்ணியமான காதல் என்றேன்.                        

திவ்யா என்னிலும் இரண்டு வயது இளையவள். அவளை முதன்முதலில் எங்கள் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் வைத்துத்தான் கண்டேன். எங்கள் வீட்டில் யாருக்கும் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததாலும் நான் பெரிய மனிதனாக இருந்ததாலும் (இருவது வயசுன்னா பெரிய மனுசன் தானே?) நான் அந்தத் திருமண நிகழ்வில் கலந்து 'சிறப்பிக்க' எனது நண்பன் சுசியுடன் சென்றிருந்தேன். பரிசு கொடுக்கும் நேரத்தில் சுசி காணாமல் போய்விட, நான் தனியாள் என்பதால் திவ்யாவின் குடும்பத்தினரோடு சேர்ந்து நின்று ஒளிப்படம் (Photo) எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இருவர் கண்களும் மட்டும் சந்தித்துக் கொண்டன. திவ்யாவுக்கு அருகில் நான்.

சில நாட்கள் கழித்து அந்தத் திருமண ஒளிப்படத் தொகுப்பை (Wedding Photo Album) காண நேர்ந்த போது "ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கு மச்சான்........" என்று சுசி உட்பட அங்கு குழுமியிருந்த நண்பர் வட்டம் முழுவதுமே என்னைக் கிண்டலடித்தது. எங்கள் உயர்தர வகுப்பின் முக்கால்வாசி நண்பர் கூட்டம் அப்போது ஊரிலேயே இருந்தது. இப்போது தான் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையில்..... சில நாட்களுக்கு அந்தக் கிண்டல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் மீது எனக்கு எந்தவொரு அபிப்பிராயமும் உடனே ஏற்படாவிட்டாலும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது 'கௌரவமான' விடயம் என்பதால் நானும் கிண்டல்களோடு சங்கமமாகிப் போனேன்.

அந்த திருமண வைபவம் முடிந்து ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். திவ்யா பாடசாலைச் சீருடையில் ஓரிரு புத்தகங்கள் மற்றும் சில எழுதுகருவிகள் சகிதம் பள்ளி மாணவியருடன் நடந்து செல்வதை எங்கள் 'உளவுத்துறை' அவதானித்து விட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தலைப்புச் செய்தியுடன் விரிவான செய்திகள் என் கைப்பேசியின் சிணுங்கலைத் தொடர்ந்து 'ஒலி'பரப்பானது. அது உயர்தரப் பரீட்சைக் காலம். திவ்யா கல்வி கற்ற பாடசாலைக்கான பரீட்சை மத்திய நிலையம் (Examination Centre) எங்கள் ஊரிலுள்ள எமது பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளே 'உளவுத்துறை' இதை அறிந்து கொண்டதால் பரீட்சை நடைபெறும் அந்த ஒரு மாத காலம் என்பாடு படு திண்டாட்டமாக இருந்தது.

"உன் தேவதை உன்னைத் தேடி இவ்வளவு சீக்கிரம் வருவான்னு நாங்க எதிர்பார்க்கல மச்சான்....."

"டேய்......... சும்மா இருங்கடா. அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல......."

"அத நீ சொல்லக் கூடாது. நாங்க சொல்லணும்... இன்னிக்கு பகல் அவ பரீட்சை முடிஞ்சு வர்றப்ப நீ உன் காதலைச் சொல்ற........."

அதிர்ந்து போனேன் நான். 'என்ன............???? காதலைச் சொல்வதா? இவங்ககிட்ட அவள வச்சு கதை அளந்தது இப்படி வம்பாகும்னு தெரியாமப் போச்சே.........'

"அதெப்படிடா.....? இன்னிக்கே...??"

"சரி... நீ காதலெல்லாம் சொல்லவேணாம். எங்க முன்னாடி ஏதாச்சும் பேசு. அது போதும்........"

ஒருவன் சொன்னதை மற்றவர்களும் ஆமோதிக்க நான் தலையைக் கூட ஆட்டாமல் தீர்மானம் 'உளவுத்துறை ரகசிய அலுவலகத்தில்' நிறைவேற்றப்பட்டது. 'நானும் கொஞ்சம் நல்லவன் இல்லையா? அதனால எப்படியும் இன்னிக்கு அவள கலாய்ச்சு நாம யாருன்னு இவங்களுக்கு காட்டணும்.' என்று நானும் மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டேன்.

                      ***************************************************

என்னுடைய கைப்பேசி பாட ஆரம்பிக்க நினைவுகளின் ஜன்னல்களை அடைத்து விட்டு நிஜ உலகின் ஜன்னல்களை திறந்து வைத்தேன். அழைப்பில் சுசி.

"காலை வணக்கம் ஜே .கே ."

"காலை வணக்கம் சுசி"

"என்னடா பண்ற?"

"தூக்கம் வரலடா. உக்காந்து யோசிச்சிட்டிருந்தேன்...."

"இப்ப என்னடா யோசனை...?"

"உனக்கு ஞாபகமிருக்கா? நாம முதன் முதல்ல திவ்யாவகலாய்ச்சது...... என்னை அவளுக்கு பூ குடுக்க வச்சது........"

"...................."

"என்ன சுசி? மறந்துட்டியா?"

"எப்படிடா மறப்பேன்? பூ குடுக்க சொன்னதே நான் தானே.....?"

                             

"ம்ம்ம்...... நெனச்சுப் பார்க்கும் போது மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தோஷம்டா......"

"............. சரிடா...........கிளம்பத் தயாராகு......... நா இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வாறேன்........"

"சரி சுசி....."

அழைப்பைத் துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். காலை ஆறு மணி முப்பது நிமிடம். குளித்து முடித்து விட்டு அம்மாவின் தேநீரைப் பருகிக் கொண்டே உடை மாற்றிக் கொண்டேன். சரியாக ஏழேகாலுக்கு சுசி காருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டில் அலுவலக விடயமாகச்
செல்வதாகக் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறி புறப்பட்டோம். மழைக்கும் ஏதோ சோகம் போலும். இரகசியமாய் அழுவது போல் இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கார் சீறிப் பாய்ந்தது என் கேள்விகளுக்கான
விடைகளைத் தேடி........

No comments :

Post a Comment

Ads

My Blog List